இப்படி ஒரு ஆட்சி இருந்தால், எந்தத் தொழிலதிபராவது தமிழகத்துக்கு வருவார்களா.. தமிழிசை கேள்வி
சென்னை: மக்கள் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறது இந்த அதிமுக அரசு. பொருளாதாரத்தில் கடைசி இடத்தில் போய் விட்டது. அதுகுறித்தெல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை. ஆனால் வெற்று விளம்பரங்களிலும், ஆடம்பரத்திலும்தான் அக்கறை காட்டுகிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
அதிமுகவுக்கு எதிராக தமிழக பாஜக தலைவர்கள் யாருமே காரசாரமாக வாய் திறக்காமல் இருந்து வரும் நிலையில் கட்சியின் மாநிலத் தலைவரான தமிழிசை மட்டுமே தொடர்ந்து விமர்சத்துப் பேசி வருகிறார்.
அதிலும் நெல்லை பாஜக மேயர் வேட்பாளர் வெள்ளையம்மாள் விவகாரத்தைத் தொடர்ந்து அவர் கொந்தளித்துள்ளார். இ்ந்த நிலையில் தமிழிசை அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:
மிரட்டி வாபஸ் பெற வைத்துள்ளனர்
உள்ளாட்சி இடைத்தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர்கள் நிறைய பேர் மிரட்டப்பட்டு, தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர்.
போலி கையெழுத்துப் போட்டு வாபஸ்
மனுக்களை வாபஸ் பெறாத சில வேட்பாளர்கள் பெயரில், போலி கையெழுத்து போட்டு, அதன் மூலம் வாபஸ் பெற்றதாக அறிவித்திருக்கின்றனர்.
நியாயமாக நடக்குமா என்பது சந்தேகம்
இந்த சம்பவங்களை பார்க்கும்போது, உள்ளாட்சிகளுக்கு நடக்கும் இடைத்தேர்தல் நியாயமாக நடக்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இந்த தேர்தலை நியாயமாக நடத்த, நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை வழக்கு தொடுக்க உள்ளோம்.அலங்கோலமாக நடத்தப்படும் இடைத்தேர்தலை, தள்ளி வைக்கக் கோரப் போகிறோம்.
பிரசாரத்திற்கு யாரும் வரவில்லை
இந்த இடைத்தேர்தலில், தேசிய தலைவர்கள் யாரும் பிரசாரம் செய்யவில்லை. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் எச்.ராஜா போன்ற தலைவர்கள், இடைத்தேர்தலில் பிரசாரம் செய்ய உள்ளனர். அதற்கான பிரசார திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.
அதுதான் 3 ஹெலிபேடுகள் உள்ளதே
துாத்துக்குடி மேயர் தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளருக்கு பிரசாரம் செய்வதற்காக, முதல்வர், துாத்துக்குடி செல்கிறார். அங்கு ஏற்கனவே, மூன்று 'ஹெலிபேட்' இருக்கிறது. ஆனால், புதிதாக ஹெலிபேட் அமைக்கின்றனர். மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது.
அது பற்றியெல்லாம் கவலையே இல்லை
பொருளாதாரத்தில், தமிழகம் பின்தங்கி உள்ளதாக, புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. மிகவும் பின்தங்கிய மாநிலமாக கருதப்பட்டு வந்த பீகார் மாநிலம், பொருளாதார புள்ளியில், முதலிடம் பெற்றிருக்கிறது.ஆனால் தமிழகம், கடைசி இடம் பெற்றிருக்கிறது. அதையெல்லாம் பற்றி ஆட்சியாளர்கள் கவலைப்படுவது மாதிரி தெரியவில்லை. ஆடம்பரத்திலும், வெற்று விளம்பரங்களிலும், ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
வீண் விவாதம்தான் நடக்கிறது
ஒரு மாநிலம், பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்றால், அந்த மாநிலத்தில், உற்பத்தி பெருக வேண்டும். அதற்கு தொழில் நிறுவனங்கள் திறம்பட நடக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் தொழிற்சாலைகளை இயக்குவதற்கு, மின்சாரம் இல்லை. அதுகுறித்து வெற்று அரசியலும், வீண் விவாதங்களும்தான் நடக்கிறதே தவிர, உருப்படியான காரியங்கள் எதுவும் நடந்த மாதிரி தெரிவில்லை.
எங்கே மின்சாரம்
மின் உற்பத்தியில், பின்தங்கி இருக்கும் தமிழகத்தை முன்னேற்றுவதாக, கடந்த மூன்றாண்டுகளாக, அரசு தரப்பில் சொல்லப்படுகிறது.ஆனால், மின் உற்பத்தியை பெருக்க, எந்த முயற்சியும் எடுக்கவில்லை. திட்டங்கள் மட்டும் அறிவிக்கப்படுகிறதே தவிர, செயல்பாட்டுக்கு வரவில்லை. இப்படி இருக்கையில், மாநிலம் எப்படி பொருளாதார வளர்ச்சி பெறும்?
அமைச்சருக்கு நேரம் இல்லை
மின் உற்பத்தி, மின் துறையை மேம்படுத்துவது தொடர்பாக, மாநில மின் துறை அமைச்சர்களை கூட்டம் டில்லியில் நடந்தது. அந்த கூட்டத்துக்கு, தமிழக மின் துறை அமைச்சர் செல்லவில்லை. காரணம், அவருக்கு நேரமில்லை. ஆனால், துாத்துக்குடியில் நடக்கும் மேயர் தேர்தலுக்காக, பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார், அமைச்சர். மின் பிரச்னையை போக்குவதை விட, தேர்தல் தான் அவருக்கு முக்கியம்.
யாருங்க வருவாங்க
மின்சாரம் தவிர, தொழிற்சாலைகள் அமைப்பதற்கும், இயங்குவதற்கும், அரசாங்கத்தில் இருந்து, நிறைய உதவிகள் தேவைப்படும். ஆனால், எந்த உதவியும், தமிழகத்தில் கிடைக்காது என்றால், எந்த தொழிலதிபர் தமிழகத்தை தேடி, தொழில் துவங்க வருவார். அதனால் தான், தமிழக பெரு முதலாளிகள் கூட, வட மாநிலங்களை நோக்கி, தொழில் துவங்கச் செல்கின்றனர்.
இங்கே வந்து அங்கே கூப்பிடும் முதல்வர்கள்
சமீபத்தில், கர்நாடகத்தில் இருந்து, கோவை வந்து, தொழில் வர்த்தக மாநாடு நடத்தி, எங்கள் மாநிலத்துக்கு தொழில் துவங்க வாருங்கள்' என, அழைத்திருக்கிறார், அம்மாநில முதல்வர் சித்தராமையா. அவரை அடுத்து, ம.பி., மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகானும், கோவைக்கு வந்து, தொழில் துவங்க வருமாறு, நம் மாநில தொழில் அதிபர்களை அழைத்திருக்கிறார்.
பிரயோஜனம் இல்லை
ஆக, தமிழகத்தில் இருக்கும் தொழிலதிபர்கள், வேறு மாநிலம் நோக்கி செல்வதன் காரணம் புரியாமல், வெற்று அரசியல் பேசி பிரயோஜனம் இல்லை.கேட்டால், எங்கள் திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றன என்பர். பின்பற்றட்டும், தவறில்லை. அதேபோல, மற்ற மாநிலங்களில் செயல்படுத்தப்படும் நல்ல திட்டங்களையும், இங்கு கொண்டு வர முயற்சி எடுக்க வேண்டாமா?
கொடுங்க, தவறில்லை
இலவசங்களை கொடுக்கிறோம் என்பார்கள்; தவறில்லை. ஆனால், எக்காரணம் கொண்டும், பொருளாதாரம் பின்னடைவை சந்திக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார் தமிழிசை செளந்தரராஜன்.