தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாக வெளியான செய்திகளுக்கு தமிழிசை சவுந்தரராஜன் மறுப்பு
தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாக வெளியான செய்திகளை தமிழிசை சவுந்தரராஜன் மறுத்துள்ளார்.
சென்னை: தமிழக பாஜக தலைவர் பதவியை தாம் ராஜினாமா செய்துவிட்டதாக வெளியான தகவல்களுக்கு தமிழிசை சவுந்தரராஜன் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்துவிட்டாரா? என்கிற தகவல் தீயாக பரவியது. இதனை சில பாஜக நிர்வாகிகளும் ஷேர் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜனிடம் நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளம் தொடர்பு கொண்டு கேட்ட போது, அப்படி எதுவும் இல்லை.. இது போன்ற செய்திகளைப் பதிவிடுபவர்களுக்கும் பாஜகவுக்கும் தொடர்பு எதுவும் இல்லை.. இவர்களைக் கூப்பிட்டு அமித்ஷா கூறிவிட்டாரா என்ன? என மறுத்துள்ளார்.
தமிழிசை பதவிக்கு குறி
ஆனால் டெல்லியில் அண்மையில் பாஜக மேலிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து இத்தகைய செய்தி பாஜக வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டே வருகிறதாம். தமிழக பாஜக தலைவர் பதவி காலம் முடிந்த போதும் நீட்டிப்பில் இருக்கிறாராம் தமிழிசை.
லாபியில் சீனியர்கள்
அவரை மாற்றிவிட்டு தாங்கள் பதவியைப் பெறுவதற்கான லாபிகளில் பாஜக சீனியர்கள் படுதீவிரமாக இருக்கின்றனர். இதை எதிர்பார்த்த தமிழிசையும் டெல்லிக்கு சீனியர்கள் ஒத்துழைப்பு தமக்கு இல்லை என்பது தொடர்பாக நீண்ட விளக்க கடிதம் அனுப்பியிருந்தார்.
அனைவருக்கும் சூடு
இப்புகார்கள் தொடர்பாகத்தான் டெல்லியில் பஞ்சாயத்து நடைபெற்றிருக்கிறது. இப்பஞ்சாயத்தில் பலருக்கும் கடும் அர்ச்சனைகள் கிடைத்திருக்கிறது. குறிப்பாக தினகரன் விஷயத்தில் டெல்லி என்னதான் முயற்சித்த போதும் தமிழக பாஜக, தீவிரமாக எதிர்க்கவில்லை என்ற சந்தேகத்துடன் இருக்கிறதாம் டெல்லி.
கடிதங்களால் யூகங்கள்
இதனைத் தொடர்ந்து பாஜக சீனியர்கள் சிலரிடம் கடிதங்களை வாங்கி வைத்திருக்கிறதாம் டெல்லி மேலிடம். இக்கடிதங்கள் ராஜினாமா கடிதங்களா? அல்லது விளக்க கடிதங்களா எனத் தெரியாமல்தான் பாஜகவினர் பூடகமாக பேசி வருகின்றனராம். இதனால்தான் தமிழிசை ராஜினாமா செய்ததாகவும் தகவல் பரவியது என்கின்றன பாஜக உள்வட்டாரங்கள்.