மணல் குவாரிகளை மூடும் உத்தரவுக்கு எதிர்ப்பு... அரசு ஹைகோர்ட்டில் மேல்முறையீடு!
மணல் குவாரிகளை 6 மாதத்தில் மூட வேண்டும் என்று உத்தரவிட்ட தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
மதுரை : மணல்குவாரிகளை மூட உத்தரவிட்ட தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் அரசு சார்பில் இந்த மேல்முறையீட்டை செய்துள்ளனர்.
தமிழகத்தில் 6 மாதத்தில் மணல் குவாரிகளை மூட வேண்டும், சென்னையைத்தவிர மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள கிரானைட் குவாரிகளை படிப்படியாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. தனி நீதிபதி மகாதேவன் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து அரசு சார்பில் இன்று மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் அரசு சார்பில் இந்த மேல்முறையீட்டை செய்துள்ளனர். இந்த மேல்முறையீட்டு வழக்கு ஓரிரு நாளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.