4 ஆண்டாக நடக்காத ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு... மார்ச்சில் நடக்கிறது!
மார்ச் மாதம் 5ம் தேதி முதல் 3 நாட்களுக்கு ஐஎஎஸ், ஐபிஎஸ் மாநாடு நடக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை : மார்ச் 5,6,7 ஆகிய 3 நாட்களுக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஐஏஎஸ்,ஐபிஎஸ் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்கும் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தின் 32 மாவட்டங்களி லும் உள்ள மாவட்ட ஆட்சியர்கள், ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்கும் மாநாடு, ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் நடத்தப்படும். மாநாட்டின் முதல் நாள் ஐஏஎஸ் அதிகாரிகளுடனும், மறுநாள் ஐபிஎஸ் அதிகாரிகளுடனும் மாநாடு நடக்கும். 3 வது நாள் மாநாட்டில் இருதரப்பு அதிகாரிகளும் பங்கேற்பர். மாநாட்டை முதல்வர் தொடங்கி வைப்பார். இறுதி நாள் நிகழ்ச்சியிலும் முதல்வர் பங்கேற்று அறிவுரைகளை வழங்குவார்.
இந்த கூட்டத்தின்போது, மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட் டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை முதல்வருக்கு விளக்கிக் கூறுவர். அதேபோல், எஸ்பிக்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள சட்டம்- ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து முதல்வரிடம் விளக்கி கூறி, அறிவுரைகள் பெறுவர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாடு கடந்த 4 ஆண்டுகளாக நடக்கவில்லை.
கடைசியாக 2013ம் ஆண்டில் ஐஏஎஸ், ஐபிஎஎஸ் மாநாடு நடைபெற்றது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு மற்றும் வார்தா புயல் உள்ளிட்ட காரணங்களால் இதுவரை நடத்தப்படவில்லை. இதனால், மாவட்டங்களுக்குரிய தனிப்பட்ட பிரச்சினைகள் கவனிக்கப்படாமல் போய்விட்டதாகவும் மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு நிலைமை சீர்கெட்டு விட்டதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் மார்ச் 5 முதல் 3 நாட்களுக்கு காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இந்தக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் பழனிசாமி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 5ம் தேதி கலெக்டர்கள், காவல்துறை ஆணையர்கள் ஒருங்கிணைந்த கூட்டமும், மார்ச் 6ல் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கான தனியான கூட்டமும் நடக்கிறது. இதனைத் தொடர்ந்து மார்ச் 7ல் காவல்துறை அதிகாரிகளுக்கான கூட்டமும் நடைபெறும் என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.