வறுமை ஒழிப்பின் "எக்ஸ்பர்ட்".. தமிழ்நாடு அரசின் நிபுணர் குழுவில் நோபல் வென்ற எஸ்தர்.. யார் இவர்?
சென்னை: தமிழ்நாடு அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டு இருக்கும் பொருளாதார வல்லுநர் குழுவில் எஸ்தர் டஃப்லோ இடம்பெற்றுள்ளார். வறுமையை ஒழிப்பதற்காக எஸ்தர் டஃப்லோ குழு நடத்திய ஆராய்ச்சி மற்றும் திட்டத்திற்கு 2019ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
2003ல் உருவாக்கப்பட்ட சர்வதேச ஆராய்ச்சி குழு அப்துல் லதீப் ஜமீல் பார்வர்டி ஆக்சன் லேப் (Abdul Latif Jameel Poverty Action Lab). தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க ஆராய்ச்சியாளர் செந்தில் முல்லைநாதன், பொருளாதார வல்லுநர் அபிஜித் பானர்ஜி, பொருளாதார ஆராய்ச்சியாளர் எஸ்தர் டஃப்லோ (அபிஜித் பானர்ஜி இவரின் கணவர்) ஆகிய மூவரும் இணைந்து இந்த குழுவை உருவாக்கினார்கள்.
சர்வதேச அளவில் வறுமை ஒழிப்பு, பொருளாதார சரிவு, கல்வி மேம்பாடு, சுகாதாரம், உணவு வழங்குவதால் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்துவதில் இந்த ஆக்சன் லேப் குழு செயல்பட்டு வருகிறது. உலகின் பல்வேறு பிராந்தியங்களில் இந்த குழுவின் கிளை உள்ளது.
வறுமை ஒழிப்பு
இந்த நிலையில் அப்துல் லதீப் ஜமீல் பார்வர்டி ஆக்சன் லேப் சார்பாக எஸ்தர் டஃப்லோ, அபிஜித் பானர்ஜி, மைக்கேல் கிரேமர் ஆகியோர் நடத்திய வறுமை ஒழிப்பு ஆய்வு தொடர்பாக இவர்கள் நடத்திய ஆய்விற்காக 2019ல் பொருளாதார நோபல் பரிசு வழங்கப்பட்டது. கல்வி, சுகாதாரம், மருத்துவம் ஆகிவற்றை உள்ளடக்கிய வறுமை ஒழிப்பை எப்படி மேற்கொள்ள வேண்டும், இந்த குழு ஆராய்ச்சி செய்தது.
எஸ்தர்
மூன்று பேர் அடங்கிய குழு இந்த பொருளாதார நோபல் பரிசை வென்றாலும், எஸ்தர் டஃப்லோதான் இந்த குழுவை முன்னின்று நடத்தியது. பொருளாதார கோட்பாடு என்பது பேப்பரில் மட்டுமே இருப்பது கிடையாது. அதை நடைமுறை ரீதியாக மக்களிடம் எப்படி கொண்டு செல்வது என்பதை எஸ்தர் டஃப்லோ தனது ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்தார். நலத்திட்டங்களை மக்களிடம் நேரடியாக கொண்டு செல்வதே வறுமை ஒழிப்பின் முதல்படி என்று இவர் குறிப்பிட்டார்.
இந்தியா
முக்கியமாக இந்தியாவின் பொருளாதார கொள்கைகளை மோசமாக விமர்சனம் செய்து வந்தார். இந்தியாவில் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் மோசமாக உள்ளது. மக்கள் வறுமையில் இருக்கவும் இதுவே காரணம். இந்தியாவில் பணக்காரர்கள், ஏழைகளுக்கு இடையிலான வேறுபாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்று விமர்சனம் செய்தவர் எஸ்தர் டஃப்லோ.
ஆர்வம்
இந்தியாவின் பொருளாதார கொள்கைகளை தொடர்ந்து கவனித்து வந்தவர். இவரைத்தான் தற்போது தமிழ்நாடு அரசு களமிறக்கி உள்ளது. முதல்வர் ஸ்டாலினுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் பொருளாதார ரீதியாக ஆலோசனை வழங்கும் குழுவில் எஸ்தர் டஃப்லோ இடம்பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் வறுமை ஓழிப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இவர் கண்டிப்பாக உதவுவார்.
எப்படி சாத்தியம்
அதோடு இவரின் கணவர் அபிஜித் பானர்ஜி இந்தியாவின் பொருளாதார கொள்கைகளை தொடர்ந்து நெருக்கமாக கவனித்து வருகிறார். அதை தொடர்ந்து விமர்சனமும் செய்து வருகிறார். இந்த நிலையில் எஸ்தர் டஃப்லோ தமிழ்நாட்டிற்காக களமிறக்கப்படுவது அதிக முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு வெறும் 5 வருடங்களுக்காக மட்டுமின்றி அடுத்த 50 வருடங்களுக்கான திட்டங்களை மிக கவனமாக வகுத்து வருகிறது.