போக்குவரத்து ஊழியர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால் சட்ட நடவடிக்கை... அரசு எச்சரிக்கை!
அரசு போக்குவரத்து ஊழியர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை : அரசுப் போக்குவரத்து கழக ஊழியர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சேவை மனப்பான்மையுடன் போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஊதிய உயர்வு பிரச்னையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் நேற்று மாலை தொடங்கி 24 மணி நேரத்தை கடந்து நீடிக்கிறது. ஊழியர்களின் திடீர் வேலைநிறுத்தத்தால் தமிழகம் முழுவதிலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மாற்று ஏற்பாடாக ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்களை வைத்து பேருந்துகளை இயக்கி வருகிறது. எனினும் போக்குவரத்து சீராகாத நிலையில் அதிக கட்டணம் கொடுத்து ஆட்டோக்களிலும், ரயில்களில் முட்டி மோதியும் மக்கள் கடும் சிரமங்களுடன் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதோடு ஊழியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவ்வாறு பணிக்குத் திரும்பாத ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.
சட்டப்ப நடவடிக்கை என எச்சரிக்கை
நீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசிய போது சேவை மனப்பான்மையுடன் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றார். அவ்வாறு பணிக்குத் திரும்பாத பட்சத்தில் நீதிமன்ற உத்தரவுபடி போக்குவரத்து ஊழியர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
முடிந்த வரை ஊதிய உயர்வு
மேலும் அவர் கூறுகையில், என்னுடைய தலைமையிலும் அதிகாரிகள் தலைமையிலும் போக்குவரத்து ஊழியர் சங்கங்களுடன் 23 முறைபேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அடிப்படை ஊதியத்தை 2.44 காரணி உயர்த்தி வழங்கவும், 3 ஆண்டுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தம் செய்யவும் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
பயணிகளுக்கு சிரமம்
ஆனால் ஒரு சில தொழிற்சங்கங்கள் அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வேண்டும் என்று கேட்டு தேவையற்ற வகையில் பிரச்னையை திசை திருப்புகின்றன. ஸ்டிரைக் என்று கூறி நள்ளிரவு என்று கூட பார்க்காமல் பயணிகள் நடுரோட்டில் இறக்கிவிட்டு ஊழியர்கள் பணிமனைக்குத் திரும்பியுள்ளனர்.
தேவையற்ற போராட்டம்
பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பேருந்தை இயக்க முன்வந்த போது, அவர்களை அச்சுறுத்தியதோடு பேருந்துகளையும் சேதப்படுத்தியுள்ளனர். வேலைநிறுத்தம் சட்டத்திற்கு புறம்பானது என்று நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது, தேவையற்ற போராட்டத்தை கைவிட்டு ஊழியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.