இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கல்லூரிகள் எண்ணிக்கை அதிகம்: அமைச்சர் பழனியப்பன்
சென்னை: இந்தியாவிலேயே அதிக கல்லூரிகள் இருப்பது தமிழகத்தில்தான் என்று சட்டசபையில் இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.
சட்டசபையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பழனியப்பன் கூறியதாவது:
தமிழகத்தில் 574 பொறியியல் கல்லூரிகள், 707 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 501 பாலிடெக்னிக் கல்லூரிகள் என மொத்தம் 2495 கல்லூரிகள் செயல்பட்டுவருகிறது. இந்தியாவிலேயே இத்தனை கல்லூரிகள் அமைந்துள்ள ஒரே மாநிலம் தமிழகம்தான்.
இதுவரை யாரும் செய்யாத அளவுக்கு ஆட்சிக்கு வந்து இரண்டே ஆண்டுகளில் தமிழக முதல்வர் புதிதாக அதிக அரசு கல்லூரிகளையும் திறக்க உத்தரவிட்டார்.ஈரோடு, தேனி, கன்னியாகுமரி மாவ்டடங்களில் அரசு கல்லூரிகள் ஒன்றுகூட இல்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
பல்கலைக்கழக கல்லூரி துவக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கன்னியாகுமரியில் இன்னும் அரசு கல்லூரி துவக்கப்படாமல் உள்ளது. ஈரோட்டில் உள்ள சிக்கன்னநாயக்கர் கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று மாணாக்கர்கள் கோரிக்கைவிடுத்து வருகிறார்கள்.
அண்ணா பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்கியவர் ஜெயலலிதா. எனவே இதுபோன்ற கொள்கை முடிவுகளை எடுக்கும்போது முதல்வர் ஜெயலலிதா கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். இவ்வாறு அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.