தமிழக உளவுத்துறை ஐஜி திடீர் இடமாற்றம்! உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை தவறாக கணித்ததாலா?
சென்னை: தமிழக உளவுத்துறை ஐஜி அம்ரேஷ் பூஜாரி அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக உளவுத்துறை ஐஜியாக இருந்தவர் அம்ரேஷ் பூஜாரி. இவர், போலீஸ் அகாடமிக்கு மாற்றப்பட்டுள்ளார். உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு ஐஜியாக இருந்த கண்ணப்பன், உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், உள்நாட்டு பாதுகாப்பு ஐஜி பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்.
திருநெல்வேலி சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் லோகநாதன், தர்மபுரி எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். அந்தப் பதவியில் இருந்த அஸ்ரா கார்க் பயிற்சியில் உள்ளார். ராமநாதபுரம் மாவட் டம் கமுதி கூடுதல் எஸ்பி விக்ரமன், விழுப்புரம் எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். அந்தப் பதவியில் இருந்த மனோகரன், சென்னை அண்ணாநகர் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பதவி காலியாக இருந்தது. சேலம் புறநகர் கூடுதல் எஸ்பி சரோஜ் குமார் தாக்கூர், திருச்சி சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தபதவியில் இருந்த அபினவ் குமார், நாகப்பட்டினம் எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
அந்தப் பதவியில் இருந்த பொன்னி, பூந்தமல்லி சிறப்புக் காவல்படை கமாண்டன்ட்டாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவியில் இருந்த மணி, சமூக நீதி மற்றும் மனித உரிமைத்துறை எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் அபூர்வ வர்மா பிறப்பித்துள்ளார்.
உளவுத்துறை ஐஜி அம்ரேஷ் பூஜாரி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருந்தார். கடந்த சனிக்கிழமை, பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் சென்று முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து விட்டு திரும்பினார். இந்தநிலையில், அவர் திடீரென்று மாற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரத் தினத்தன்று கல்பனா சாவ்லா விருது பெற்ற பொன்னியும் மாற்றப்பட்டு, சாதாரண பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பொன்னி மணல் கடத்தல் குற்றத்தை ஒடுக்குவதில் துணிச்சலாகப் பணியாற்றியதற்காகவும் மாவோயிஸ்ட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தியதற்காகவும் கல்பனா சாவ்லா விருது பொன்னிக்கு வழங்கப்பட்டது.
ஆனால், இவர் மீதும் சில சர்ச்சைகள் நிலுவையில் உள்ளன.
குன்னூர் மாஜிஸ்திரேட் தங்கராஜ் தன்னை திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி ஏமாற்றிவிட்டார் என்று என குன்னூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் பெண் எஸ்.ஐ உமா மகேஸ்வரி கொடுத்த புகாரின் அடிப்படையில் தங்கராஜை அப்போது திருப்பூர் எஸ்.பி-யாக இருந்த பொன்னி தலைமையிலான டீம் கைது செய்தது.
இதை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்காக எடுத்துக்கொண்டு, மாஜிஸ்திரேட் தங்கராஜை கைது செய்வதற்கு முன்பு நீலகிரி மாவட்ட தலைமை நீதிபதியிடம் முறையாகத் தெரிவிக்கவில்லை. நீலகிரி மாவட்ட தலைமை நீதிபதி மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்குத் தகவல் அனுப்பவில்லை. தங்கராஜை அவரது சட்ட ஆலோசகர் தொடர்புகொள்ள அனுமதிக்கவில்லை. இவை அனைத்து வழிமுறைகளை மீறியதாகும் என்று பொன்னி மீது பாய்ச்சல் காட்டியது.
இது தொடர்பாக பொன்னியின் மன்னிப்பைக்கூட ஏற்றுக்கொள்ள நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந் நிலையில் பொன்னிக்கு விருதை அளித்தார் ஜெயலலிதா.
இப்போது ஜெயலலிதா அடுத்தடுத்து பல சட்டச் சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில் பொன்னியை சாதாரண பதவிக்கு அனுப்பியுள்ளார் ஜெயலலிதா.
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று பாஜக டெபாசிட்டுகளை இழக்கும் என்று உளவுத்துறை அறிக்கையளித்ததாகவும், ஆனால் பாஜக எதிர்பார்க்காத அளவுக்கு வாக்குகளை பெற்றுள்ளதாகவும் எனவேதான் உளவுத்துறை ஐஜி மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.