இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்புள்ள மாநிலம் தமிழகம்தான்! சட்டசபையில் ஜெயலலிதா பேச்சு
சென்னை: இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. முன்னதாக கேள்வி நேரம் நடைபெற்றது.
முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் கூறியதாவது: நாட்டிலேயே தமிழ்நாட்டில் தினந்தோறும் அதிகம் போராட்டங்கள் நடைபெறுகிறது என்று அரசுக்கு எதிரான குற்றச்சாட்டாக சில உறுப்பினர்கள் முன்வைத்தனர்.
இதை அப்படி பார்க்ககூடாது. போராட்டம் நடத்த கூடிய ஜனநாயகம் தமிழகத்தில் உள்ளது என்பதைத்தான் இந்த போராட்டங்கள் காண்பிக்கின்றன. மேற்குவங்கத்திலோ, மத்திய பிரதேசத்திலோ போராட்டங்கள் நடத்த அனுமதியே தருவதில்லை. எனவே இதில், தமிழகத்தை பற்றி பெருமை பட வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன.
அரசியல் கட்சிகள், பொதுநல சங்கங்கள் தங்கள் நலன், பொதுநலனுக்காக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற ஜனநாயக வழியிலான போராட்டங்களை தமிழகத்தில் நடத்தி வருகின்றன. மாநிலத்தில் செயல்படும் பல இயக்கங்கள், நிறைவேற்ற பேச்சுவார்த்தை மூலம் சம்மந்தப்பட்டவர்களிடம் பேசி கோரிக்கையை நிறைவேற்றுகின்றன.
சில நேரங்களில் அந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டாலோ, அல்லது கோரிக்கை ஏற்கப்படாமல்போனாலோ, போராட்டம் வெடிக்கிறது. அப்போது மாவட்ட நிர்வாகிகள் இரு தரப்பையும் சேர்த்து பேசிதீர்க்கிறார்கள். அப்படியும் பிரச்சினைகள் சரியாகாவிட்டால் உண்ணாவிரதம், வேலை நிறுத்தம், போன்ற ஜனநாயக வழிகளிலான போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்,
இதுபோன்ற அமைதியான மக்கள் இயக்க போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கிவருவதோடு, போதிய பாதுகாப்பு வழங்கிவருகின்றனர். அமைதியான போராட்டங்களுக்கு காவல்துறை என்றுமே அனுமதி மறுப்பதில்லை. அதே நேரம் காலவரையற்ற உண்ணாவிரதம், பொதுசொத்துக்கு சேதம் விளைவித்தல், நிர்வாகத்திற்கு குந்தகம் விளைவித்தல் போன்ற செயல்களுக்குதான் அனுமதியில்லை.
3வது முறையாக நான் முதல்வரான பிறகு தமிழகத்தில் குற்றங்கள் படிப்படியாக குறைந்துகொண்டே வந்துள்ளன. என்னிடமும் இதற்கான புள்ளி விவரங்கள் உள்ளன. பதிலுரையில் விரிவாக அதுபற்றி கூற உள்ளேன். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் வைக்கப்படுகின்றனர். இதனால் பெண்களுக்கு அதிக பாதுகாப்பு கிடைக்கிறது.
நாட்டிலே முதல் முறையாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க 13 அம்சங்கள் கொண்ட செயல் திட்டத்தை நான் வகுத்தளித்தேன்.
குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்வது, மகளிர் விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது, காவல்துறையினரை அதிக அளவில் பணியமர்த்துவது போன்ற நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்து வருகின்றது. இந்த அரசு, பெண்களின் முன்னேற்றத்திற்கும், அவர்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
பெண்கள் பணிபுரியும் இடங்களில் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை ஏற்படுத்தவும்,, முக்கிய இடங்களில் கேமராக்கள் பொருத்தவும், இரவுப் பணி முடித்து செல்லும் பெண்களை பாதுகாப்பின்றி செல்ல அனுமதிக்க கூடாது என்றும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக இருக்கும் மாநிலம் தமிழ்நாடு என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்தார்.