7வது ஊதியக் குழு சம்பளத்தில் முரண்பாடு... அக்டோபர் 30ல் போராட காவல்துறையினர் முடிவு!
7வது ஊதியக்குழு சம்பளப் பிரச்சனையால் அக்டோபர் 30ம் தேதி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட போலீசார் முடிவு செய்துள்ளனர்.
சென்னை : 7வது ஊதியக்குழு சம்பளப் பிரச்னையால் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்திற்கு போலீசார் வாட்ஸ் அப் மூலம் அழைப்பு விடுத்து வருகின்றனர்.
ஏழாவது ஊதியக்குழுவை அமல்படுத்தும் போது காவல்துறையினருக்கு இருக்கும் முரண்பாடுகளைக் களைந்து 10ம் வகுப்பு தரத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். வரையறுக்கப்பட்ட பணி, வார விடுப்பு, விடுமுறை தினங்களில் பணி செய்தால் இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும்.
மக்கள் தொகைக்கேற்ப காவலர்களை நியமிக்க வேண்டும். சென்னையில் வழங்கப்படுவதுபோல மற்ற மாவட்டங்களுக்கும் உணவுப்படி வழங்க வேண்டும். காவலர்களை வீட்டு வேலைக்குப் பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை காவல்ர்கள் நீண்ட காலமாக முன்வைத்து வருகின்றனர்.
தமிழக அரசு 7வது ஊதியக்குழுவை அமல்படுத்த உள்ள நிலையில் அதில் காவல்துறையினருக்கு உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதற்காக அக்டோபர் 30ம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க வாட்ஸ் அப்பில் போலீசார் தகவல் பரப்பி வருகின்றனர்.
முதல்கட்டமாக உண்ணாவிரதப் போராட்டத்திற்கும் அடுத்த கட்ட போராட்டங்களையும் அறிவிக்க காவலர்கள் முடிவு செய்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து மூத்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிகிறது. எனினும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை போராட்டத்தில் இருந்து பின் வாங்கப் போவதில்லை என்று காவலர்கள் விடாப்பிடியாக உள்ளதாக தெரிகிறது.