2 வாரங்களுக்கு அப்படியொன்றும் ஆபத்தில்லை.. 'இயல்பு நிலைக்கு' திரும்பிய தமிழகம்!
Recommended Video

உச்சகட்ட பரபரப்பில் இருந்த தமிழக அரசியலுக்கு 2 வாரங்கள் ஓய்வு கிடைத்துள்ளது. இனிமேல் அரசியல் பேச்சுக்கள் இருக்கலாமே தவிர, அரசியல் நகர்வுகளுக்கு வாய்ப்பு இல்லை.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ஹைகோர்ட் நேற்று நீடித்து உத்தரவிட்டதன் மூலம், ஒரு பெருமூச்சு விட்டுக்கொள்ளும் கால அவகாசம் அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் வழங்கிய கடிதத்தை தொடர்ந்து ஆரம்பித்த மாரத்தான் அரசியல் ஓட்டத்திற்கு தற்போது சற்று ஓய்வு.

அவசரத்தில் அனைத்து கட்சிகளும்
ஆளுநர் உடனடியாக எடப்பாடி அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கவர்னர் மாளிகைக்கு கால் கடுக்க நடந்தனர் எதிர்க்கட்சிகள். ஆனால் ஆளுநரோ, அவசரமாய் மும்பை கிளம்பி போய்விட்டார்.

ஆளுநர் மீது விமர்சனம்
ஆளுநரின் புறப்பாட்டை தொடர்ந்து, அவர் மீதான விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. தினகரன் தரப்பும் ஆளுநரின் தாமதம்தான் அத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம் என்று விமர்சனத்தை முன்வைத்தார்.

உச்சம் தொட்ட பரபரப்பு
இந்த நிலையில் டெல்லியில் உள்துறை அமைச்சர், குடியரசு தலைவர் மீண்டும் உள்துறை அமைச்சர் என வரிசையாக ஆலோசனை நடத்தி தமிழகத்தின் நாடித்துடிப்பை எகிற வைத்த கவர்னர், சென்னை வந்து இறங்கியதும், பரபரப்பு உச்சம் தொட்டது. அடுத்து ஆளுநர் என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பில் தமிழகமே காத்து கிடந்தது.

2 வாரத்திற்கு ஒத்திவைப்பு
இந்த நிலையில்தான் நேற்று, ஹைகோர்ட் வழங்கிய ஒரு உத்தரவால் அனைத்து தரப்பும் ஆசுவாசம் அடைந்துள்ளது. மறு உத்தரவு வரும்வரை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நட.த்த உத்தரவிடக் கூடாது என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணை அக்டோபர் 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இயல்பு நிலை
இதன் மூலம், அடுத்து கோர்ட் கூடும்வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாது என்பது தெளிவாகிவிட்டது. ஆளுநர் நாக்பூர் கிளம்புகிறார். எடப்பாடி, பன்னீர்செல்வம், எம்ஜிஆர் நூற்றாண்டு கூட்டங்களில் குட்டிக்கதைகளை சொல்லி எதிர் தரப்பை தாக்கிவருகிறார்கள். துரோகம், நம்பிக்கை துரோகம் என்றெல்லாம் தினகரன் தரப்பு திரும்ப திரும்ப கூறியபடி பேட்டியளித்து வருகிறது. தீபா, திடீரென அனிதா குடும்பத்தை பார்க்க அரியலூர் செல்கிறார். இப்படி தமிழகம் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது. 2 வாரங்களுக்கு ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்யத்தான் முடியுமே தவிர சட்டப்படி, அரசியல்ரீதியாக எந்த ஒரு பெரிய விஷயமும் நடக்காது என்ற நம்பிக்கையில், பெருமூச்சுவிடுகிறார்கள் தமிழக மக்கள்.












Click it and Unblock the Notifications