ரயில் பயணத்தை போல பஸ்சுக்கு உள்ளே சாப்பாடு சப்ளை: ஆம்னி பஸ் உரிமையாளர்கள் முடிவு
சென்னை: விமானம், ரயில் பயணத்தைப்போலவே, ஆம்னி பஸ் பயணத்தின்போதும், இரவு சாப்பாட்டை முன்கூட்டியே முன்பதிவு செய்துகொள்ளும் வசதி வரப்போகிறது. இதன் மூலம், பஸ் பயணத்தின்போது சாலையோர 'மோட்டல்களில்' அதிக விலை கொடுத்து தரம் குறைந்த உணவை சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு விரும்பிய உணவை சாப்பிட முடியும்.
இரவு உணவு
ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க பொருளாளர் மாறன் இதுகுறித்து கூறுகையில், "ஆம்னி பஸ் பயணிகளுக்கு பயணத்தின் போது தரமான உணவு கிடைக்கவில்லை என்ற குறை உள்ளது. இதை சரி செய்வதற்காக இரவு உணவு வழங்கும் நடைமுறையை கொண்டுவர ஆலோசித்து வருகிறோம்.
சைவம், அசைவம்
பிரபல சைவ மற்றும் அசைவ ஓட்டல் உரிமையாளர்களிடமும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். எந்த வகையான உணவு வேண்டும் என்று ஆன்லைன் டிக்கெட் முன் பதிவின் போது குறிப்பிட்டால், பயணிகள் குறிப்பிடும் ஓட்டல் உணவு பயணத்தின்போது வழங்கப்படும்.
டிக்கெட் கட்டணத்துடன் வசூல்
சாப்பாட்டுக்கான கட்டணம் டிக்கெட்டுடன் சேர்த்து வசூலிக்கப்படும். ஓரிரு மாதங்களில் இரவு உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்" என்றார்.
சென்னையில் இரு இடங்கள்
முதல் கட்டமாக, சென்னை கோயம்பேடு பஸ்நிலையம், பெருங்குளத்தூர் ஆகிய இரண்டு இடங்களில் உணவு வழங்க ஆலோசிக்கப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்விரு பஸ் நிலையங்களில் இருந்து புறப்படும் பஸ்களில் பயணிப்போருக்கு உணவு பொட்டலம் வழங்கப்பட்டுவிடும்.
ரயில், விமான பயணம்போல
ரயில், விமான பயணங்களுக்கு ஆன்லைனில் முன் பதிவு செய்யும் போது தங்களது இருக்கைக்கு என்ன சாப்பாடு வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோமோ அதைப்போல ஆம்னி பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளும் ஆன்லைன் மூலமாக உணவு வகைகளை பதிவு செய்யலாம்.
பஸ் நிலையத்திலும் ஆர்டர்
பஸ் நிலையத்தில் நேரடியாகவும் ஆர்டர் கொடுக்கலாம். இந்த வசதி ஆன்லைனில் உள்ள அனைத்து ஆம்னி பஸ்களிலும் கிடைக்க ஏற்பாடு செய்ய உள்ளனர். இதன் மூலம் தாங்கள் விரும்பிய உணவை இருக்கையில் இருந்தே சாப்பிட்டு கொண்டு பயணத்தை மேற்கொள்ளலாம். இப்படி உணவு வழங்கும்போது பஸ்ஸை நிறுத்தாமல் சேரும் இடம் வரைக்கும் வண்டியை நிறுத்தாமலே ஓட்டுவது சாத்தியமில்லாதது. சிறுநீர் கழிப்பதற்காக ஏதாவது மோட்டலில் பஸ்சை நிறுத்த வேண்டியதும் இருக்கும். அந்த மோட்டல்களில் தேவைப்படுவோர் சாப்பிட்டுக்கொள்ள முடியும்.
சென்னையிலிருந்து புறப்படும் பஸ்கள்
தமிழகத்தில் மொத்தம் 1500 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதில் சென்னையில் இருந்து மட்டும் சுமார் 350 பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து புறப்படும் இந்த பஸ்களில்தான் முதல்கட்டமாக உணவு வழங்கப்பட உள்ளது. அரசு பஸ்களின் பழைய தோற்றம், வேகம் குறைந்த பயணத்தால் அவதிப்படும் மக்கள் ஆம்னி பஸ்களை நாடுவது குறிப்பிடத்தக்கது.