மாணவர்களை பாதிக்கும் பேருந்து ஸ்டிரைக்... போராட்டம் வெடிக்கும் என 'கோட்சோ' எச்சரிக்கை!
போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும் என்று தமிழ்நாடு மாணவர்இயக்கங்களின் கூட்டமைப்பான கோட்சோ எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை : போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும் என்று தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பான கோட்சோ எச்சரிக்கை விடுத்துள்ளது. பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால் மாதிரி தேர்வு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஊழியர்களின் போராட்டம் நியாயமாக இருந்தாலும் ஒரேயடியாக பொதுமக்களை நட்டாற்றில் தவிக்க விட்டுள்ள போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் அனைவர் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பான கோட்சோ விடுத்துள்ள அறிக்கையில், போக்குவரத்து கழக பணியாளர்களின் திடீர் வேலை நிறுத்தத்தால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பாதிப்படைகின்றனர். குறிப்பாக மாதிரி தேர்வு எழுதும் பத்து மற்றும் பண்ணிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அரசு பேருந்துகளை அனுபவமில்லாத மாற்று ஓட்டுநர்களைக் கொண்டு இயக்கி விபத்து ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு? அரசு பேருந்துகளின் நிலையை அறிந்து அதனை இயக்கும் பக்குவமும் வழித்தடங்களை அறிந்து பேருந்தை நிறுத்தும் பக்குவமும் அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கே உள்ளது.இது பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதை அரசு சிந்திக்க வேண்டும்.
போக்குவரத்து கழக ஊழியர்களின் நியாயமான கோரிக்கையை அரசு ஏற்று உடனடியாக இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.இதே நிலை தொடர்ந்தால் பேருந்துக்கு காத்திருக்கும் மாணவர்களை ஒன்று திரட்டி ஆங்காங்கே போராட்டம் நடத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்வதாக மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பான கோட்சோ எச்சரித்துள்ளது.