மூன்றே நாள்தான் தமிழக சட்டசபை கூட்டம்! மக்கள் பிரச்னைகளை எங்கேதான் பேசுவது?
சென்னை: தமிழக சட்டப்பேரவையின் குளிர் காலக் கூட்டத் தொடரை வெறும் மூன்று நாட்கள் மட்டுமே நடத்த சட்டசபை அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி கோர்ட்டில் கடந்த செப்டம்பர் மாதம் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது முதல்வர் மற்றும் எம்எல்ஏ பதவி பறிபோனது. புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் செப்டம்பர் 29ம் தேதி பதவியேற்றார்.ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்று 2 மாதங்கள் ஆன பின்னரும் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறாமல் இருந்து வந்தது.
பல பிரச்சினைகள்
இந்நிலையில், தமிழக மீனவர்கள் 5 பேரின் தூக்குதண்டனை விவகாரம், முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு தொடர்ந்த விவகாரம், காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு இரண்டு அணை கட்டப்போவதாக அறிவித்த விவகாரம்போன்றவற்றிற்கு தீர்வு காண தமிழக சட்டப்பேரவையை உடனே கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி, எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த், காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிதலைவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
ஊழல்கள் ஆயிரம்..
இந்நிலையில்தான் சட்டசபை 4ம்தேதி தொடங்கும் என்று தமிழக சட்டசபை செயலர் ஜமாலுதீன் சமீபத்தில் அறிவித்தார். சத்துணவு திட்டத்திற்கு வாங்கிய முட்டையில் ஊழல், பருப்பு கொள்முதலில் ஊழல், ஆவின் பால் ஊழல் என தமிழக அரசை சுற்றிலும் பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்துள்ளதால் அதுகுறித்தும் விவாதிக்க எதிர்க்கட்சிகள் ஆர்வமாக இருந்தன.
கேப்டன் ரிட்டர்ன்
வெளிநாட்டில் இருந்து திரும்பிய விஜயகாந்த், சட்டசபைக்கே வராமல் இருந்த கருணாநிதி ஆகியோரும் சபைக்கு வந்து அரசுக்கு கடுமையான நெருக்கடி கொடுக்கலாம் என்ற தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும் என்று முடிவு செய்ய அலுவல் ஆய்வு குழு கூட்டம் இன்று கூடியது.
அலுவல் ஆய்வு குழு
சட்டப்பேரவை தலைவர் தனபால் தலைமையிலான கூட்டத்தில் அதிமுக கொறடா மனோகரன், திமுக கொறடா சக்ரபாணி, தேமுதிக கொறடா சந்திரகுமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், சட்டசபையை 3 நாட்கள் மட்டும் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. நாளை, நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை மற்றும் திங்கள் கிழமை ஆகிய மூன்று நாட்கள் சட்டசபை நடைபெறும் என்று அதில் முடிவெடுக்கப்பட்டது.
குறைந்தது, ஐந்து நாட்களாவது பேரவையை நடத்த வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கை மறுக்கப்பட்டதால் சக்கரபாணி வெளிநடப்பு செய்துள்ளார்.