ஆளே இல்லாமல் இயங்கிய டாஸ்மாக்... சீல் வைத்த அதிகாரிகள்
தூத்துக்குடி: தூத்துக்குடி டாஸ்மாக் கடையில் ஊழியர்கள் யாரும் இல்லாமல் மர்ம நபர் ஒருவர் மதுபானங்களை விற்பனை செய்தார் இதனால் அங்கு சோதனைக்கு சென்ற அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியில் கடந்த வாரம் தேர்தல் நேரத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்த சமயத்தில் பெட்டிக்கடையில் 1365 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததாக போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதற்கு அங்குள்ள டாஸ்மாக் கடையில் பணிபுரியும் சிலர் உடந்தையாக இருந்ததாக புகார் கூறப்பட்டது. இந்த நிலையில் தாளமுத்து நகர் பகுதியில் சில டாஸ்மாக் கடையில் முறைகேடுகள் தொடர்ந்து நடப்பதாக அதிகாரிகளுககு புகார் சென்றன.
இதையடுத்து அங்கு மதுரை முதுநிலை மண்டல மேலாளர் கண்ணன், தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சேகர் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் தாளமுத்து நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் தாளமுத்து நகர் உள்ள கடை எண் 9972 மற்றும் 9954 என இரு கடைகளில் விற்பனை கணக்குகளை அதிகாரிகள் சரி பார்த்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த சூப்பர்வைசர் திடீரென அதிகாரிகளை தள்ளி விட்டு ஓட்டம் பிடித்தார். விற்பனையாளர் யாரும் இல்லாத நிலையில் திடீரென அவர் கடையை அம்போவென வி்ட்டு விட்டு ஓடியதால் அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
தொடர்ந்து விசாரணை நடத்திய அதிகாரிகள், ஓட்டம் பிடித்தவர் டாஸ்மாக் ஊழியரே அல்ல என்றும் விற்பனையாளரும், சூப்பர்வைசரும் சொந்த காரணங்களுக்காக வீட்டிற்கு சென்றுள்ளனர் என்றும் தெரியவந்தது.
இதையடுத்து சோதனைக்கு போன அதிகாரிகளை சில மணி நேரம் மதுபானங்களை விற்பனை செய்தனர். பின்பு மாற்று ஏற்பாடுகள் செய்தனர்.
பின்னர் அங்கு நடந்த தொடர் விசாரணையில் இரவு 7 மணிக்க மேல் நடக்கும் விற்பனையின் கணக்கை காட்டாமல் மறுநாள் காலையில் விற்பனை நடந்ததாக காண்பித்து அந்த பணத்தை சொந்த உபயோகத்திற்கு பலர் பயன்படுத்தி வந்துள்ளனர் என்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் போலி ஊழியர் பணியாற்றிய டாஸ்மாக் கடையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.