நெல்லை: ஆசிரியை பற்றி அவதூறு அரசு பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர் மீது தாக்குதல்
நெல்லை: நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்தில் அரசு பள்ளி வளாகத்திற்குள் புகுந்து ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியையைப் பற்றி அவதூறாக சுவற்றில் எழுத தூண்டியதாலே ஆசிரியர் தாக்கப்பட்டதாகவும், அவதூறாக எழுதிய மாணவன் மற்றும் தாக்குதலுக்கு ஆளாக ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொருளியல் பாடப்பிரிவில் முதுநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் அ.ஜெயக்குமார்(36). இவருக்கும் அதே பள்ளியில் பணியாற்றி வரும் வேறு ஒரு ஆசிரியருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், புதன்கிழமை மாலையில் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டம் முடிந்து ஆசிரியர் ஜெயக்குமார் வகுப்பறையை விட்டு நடந்து வந்து கொண்டிருந்தாராம்.

மர்மக்கும்பல் தாக்குதல்
அப்போது பள்ளிக்குள் புகுந்த மர்மகும்பல் ஒன்று ஆசிரியர் ஜெயக்குமாரை சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவரை உடனடியாக சக ஆசிரியர்கள் மீட்டு அருகேயுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் அனுமதி
பின்னர் அவர் தீவிர சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து பாவூர்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் விஜயக்குமார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டார்.

வழக்குப் பதிவு
இந்த சம்பவம் தொடர்பாக சமத்துவ மக்கள்கட்சி அமைப்பு செயலாளர் ஆர்.கே.காளிதாஸ் மற்றும் அ.தி.மு.க. யூனியன்சேர்மனும், தென்காசி தொகுதி செயலாளருமான செல்வமோகன்தாஸ்பாண்டியன் மற்றும் 20 நபர்கள்மீது பாவூர்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆசிரியர் ஜெயக்குமார் மீதும் வழக்கு
இதனிடைய கடந்த சில தினங்களுக்கு முன்னர், அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைப் பற்றி சுவற்றில் தவறாக எழுதப்பட்டிருந்தது. இது பற்றி விசாரணை மேற்கொண்டதில் ப்ளஸ் டூ மாணவர்தான் இதை எழுதினார் என்றும் எழுதத்தூண்டியது ஆசிரியர் ஜெயக்குமார் என்பதும் தெரியவந்தது.

புகார் கொடுத்த ஆசிரியை
இதையடுத்து தன்னைப் பற்றி அவதூறாக எழுதிய மாணவர் மீதும், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்நிலையத்தில் ஆசிரியை புகார் அளித்தார்.

போலீஸ் வழக்குப் பதிவு
இதையடுத்து தாக்குதலுக்கு ஆளான ஆசிரியர் ஜெயக்குமார், மற்றும் மாணவன் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications