அங்கிட்டு அல்லது இங்கிட்டு.... சிந்தாம சிதறாம கூண்டோடு தாவுறோம்.. சபதம் போடும் ஓபிஎஸ் தளபதிகள்
அதிமுகவின் ஓபிஎஸ் அணியின் மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனராம். கூண்டோடு தாவுவதற்கான அத்தனை வேலைகளிலும் ஓபிஎஸ் தளபதிகள் இறங்கிவிட்டனராம்.
Recommended Video
சென்னை: அதிமுகவில் மீண்டும் தர்மயுத்தம் தொடங்குவதற்கான போர் முரசு கொட்டப்பட்டுவிட்டது.. இரட்டை இலை சின்னம் வழக்கில் தீர்ப்பு வரும் நேரத்தில் கலகக் குரல்கள் பகிரங்கமாக வெடித்திருக்கிறது.
அதிமுகவில் ஓபிஎஸ் தனி ஆவர்த்தனம் வாசித்தபோது ராஜ்யசபா எம்.பி. மைத்ரேயன், கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் என ஒரு பட்டாளமே ஆதரவு தந்தது. ஓபிஎஸ்-ன் டெல்லி முகமாக லாபியிஸ்டாக எல்லாவற்றையும் பார்த்து கொண்டார் மைத்ரேயன்.
பொறுப்புகள் கைவிரிப்பு
அதிமுகவின் இரு அணிகளும் இணைவது தொடர்பான பேச்சுகள் வந்த போது தங்களுக்கு என்ன முக்கியத்துவம் கிடைக்கும் என்கிற கேள்வியை ஓபிஎஸ் தளபதிகள் வைத்தனர். ஜெயலலிதா இருந்தபோது என்ன மாதிரி கட்சி பொறுப்புகள் இருந்தனவோ அதே நிலைமை நீடிக்கும் என எடப்பாடி தரப்பு தெரிவித்தது.
ஒப்பந்தம் கூட கிடைக்கலை
ஆனால் இதை ஓபிஎஸ் தளபதிகள் ஏற்கவில்லை. கட்சியிலாவது குறைந்தபட்ச பொறுப்பு இருந்தால்தான் ஆட்சி ஓடும் வரை குதிரைசவாரி செய்ய முடியும் என கணக்குப் போட்டு இலவு காத்த கிளிகளாக இருந்தனர். ஆனால் சாதாரண ஒப்பந்தம் கூட ஒருவருக்கும் கிடைக்கவில்லை.
தாவுவதற்கு திட்டம்
பொறுத்துப் பொறுத்துப் பார்த்து இப்போது பொங்கத் தொடங்கவிட்டனர். ஏற்கனவே திட்டமிட்டபடி கூண்டோடு அங்கிட்டு தாவிவிடுவோம் என்பதுதான் ஓபிஎஸ் தளபதிகளின் வியூகமாம்.
டெல்டா குரூப் கண்காணிப்பு
ஆனால் மேலிடமோ தேர்தல் நேரத்துல மொத்தமாக வந்தா செம ரணகளமாக இருக்குமே என்கிறதாம். இதைக் கேள்விப்பட்ட டெல்டா குரூப்பும் ஓபிஎஸ் தளபதிகள் ஏன் நம்ம குடும்பத்தை எதிர்க்கிறார்கள்? அதை எப்படி சரி கட்டலாம்? என ஆலோசனை நடத்தி வருகிறதாம்.
ஆக அடங்காத அமளி துமளிக்கு அஸ்திவாரம் போடப்பட்டு வந்தது... எந்த நேரத்திலும் கூத்து அரங்கேறத்தான் போகிறது.