ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்-30க்குள் நடத்தப்படும் - அமைச்சர் பாண்டியராஜன்
வரும் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆசிரியர் தகுதித்தேர்வு வரும் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் நடத்தப்படும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் ஆசிரியர் பணியிடங்களை தகுதித் தேர்வு மூலம் நிரப்பப்பட வேண்டும் என்ற நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே, பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் TET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது.

இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் கடந்த மூன்று ஆண்டுகளாக தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த வழக்கில், கடந்தாண்டு தமிழகத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது. எனவே இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஒட்டுமொத்த ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த கணக்கெடுப்பு நடந்து வருகிறது. ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்-30 தேதிக்குள் நடத்தப்படும். தகுத்தேர்வு நடத்துவதில் உள்ள சட்ட சிக்கல்கள் விரைவில் களையப்படும். கால அட்டவணை தயாரிக்கப்பட்டு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படும். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வு வெற்றி பெற்றவர்களை கொண்டு நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications