தினகரனின் முதல்வர் ஆசை.. சரியான நேரம் பார்த்து ஆப்படித்த தங்கமணி, வேலுமணி!
முதல்வராக வேண்டும் என்று டிடிவி தினகரனுக்கு ஏற்பட்ட ஆசைக்கு அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும் முட்டுக்கட்டை போட்டது தற்போது கட்சி பிளவுக்கு காரணமாகியுள்ளது.
சென்னை: முதல்வர் ஆசை சசிகலாவை பெங்களூரு சிறைக்கு அனுப்பியது கட்சியை இரண்டாக உடைத்தது. இப்போது தினகனின் முதல்வர் ஆசை கட்சியை துண்டு துண்டாக சிதைத்துள்ளது. சரியான நேரம் பார்த்து அமைச்சர்கள் தங்கமணியும் வேலுமணியும் தினகரனின் முதல்வர் ஆசைக்கு ஆப்படித்துள்ளனர்.
முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். அவருக்கு முதல்வர் ஆசையை தூண்டிவிட்டது தினகரன்தான். முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓபிஎஸ், சசிகலாவிற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தவே கட்சி பிளவு பட்டது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்லவே, கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார் டிடிவி தினகரன். இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கினார்கள்.
எடப்பாடி பழனிச்சாமி தனது கைப்பாவையாக இருப்பார் என்று நம்பினார் தினகரன். ஆனால் அவர் தனித்து செயல்பட ஆரம்பித்தார். இது எரிச்சலை ஏற்படுத்தியது. அதற்கு தூபம் போட்டது தளவாய் சுந்தரம் என்கிறார்கள்.
முதல்வர் ஆசை
ஆட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர நினைத்தார். இதற்காகவே இடைத்தேர்தலில் போட்டியிட்டார். முதல்வராக நினைக்க மாட்டேன் என்று கூறினாலும் அடிமனதில் அவருக்கு இருந்த ஆசை அதிகாரம் செய்ய வைத்தது. இது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட கொங்கு மண்டல அமைச்சர்களுக்கு பிடிக்கவில்லை. தேர்தலில் ஒட்டுமொத்தமாக உள்ளடி வேலை செய்தனர். பணப்பட்டுவாடா புகாரில் இடைத்தேர்தல் ரத்தாகிவிட்டது.
ஒட்டாத மனநிலை
ஆரம்பத்தில் இருந்தே கொங்கு மண்டல அமைச்சர்களுக்கும் தினகரனுக்கும் ஒட்டவேயில்லையாம். எடப்பாடி பழனிச்சாமியை தினகரன் அவமானப்படுத்தியை அவர்ககளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனையடுத்தே தினகரனுக்கு எதிரான ஆபரேசனை கையில் எடுத்தார்களாம். ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு நாளிலேயே இதற்கான அச்சாரம் போடப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
ஆபரேசன் வேலுமணி
இரட்டை இலையையும், கட்சியையும் காப்பாற்ற வேண்டுமெனில் இரு அணிகளும் இணைய வேண்டும் என்பது மூத்த தலைவர்களின் விருப்பம். ஆனால் சசிகலா குடும்பத்தினர் இருக்கும் வரை அந்த பேச்சுக்கே இடமில்லை என்று பன்னீர் செல்வம் கூறியுள்ளார். இதனையடுத்து வேலுமணி தங்கமணி தலைமையில் ஆபரேசன் ஆரம்பமானது.
மகாதேவன் மரணம்
சனிக்கிழமையன்று மாமன் மகன் மகாதேவன் மரணமடைந்து விட, தஞ்சாவூர் சென்றார் தினகரன், சென்னையில் மளமளவென வேலைகள் ஆரம்பமானது. கொங்கு மண்டல அமைச்சர்களுக்கு திவாகரனின் ஆதரவு கிடைக்கவே உற்சாகம் மேலும் அதிகரித்தது.
அதிரடி ஆக்சன்
டிடிவி தினகரன் பெங்களூருக்கு சென்ற போது தங்கமணி வீட்டில் அமைச்சர்கள் கூடி பேசி முக்கிய முடிவு ஒன்றை எடுத்தார்கள். அது தினகரன், சசிகலாவை ராஜினாமா செய்யச் சொல்வதுதான். அதனை தினகரன் ஏற்கவில்லை. எனக்கு முதல்வர் பதவி கிடைக்காவிட்டால் ஆட்சியைக் கவிழ்ப்பேன் என்று சவால் விட்டாராம்.
தள்ளி வைக்கிறோம்
கட்சியைக் காப்பாற்ற சசிகலா, டிடிவி தினகரனை தள்ளி வைக்கிறோம் என்று அமைச்சர்கள் அதிரடியாக அறிவிக்க, தனக்கு ஆதரவாக சில எம்எல்ஏக்களை தயார் படுத்தியுள்ளார் தினகரன். சசிகலாவின் முதல்வர் ஆசை அவருக்கு சிறையை பரிசளித்தது. தினகரன் முதல்வர் ஆசை கட்சியை மேலும் சிதைத்துள்ளது.
கழுத்துக்கு கத்தி
டிடிவி தினகரனின் கழுத்துக்கு மேல் ஃபெரா வழக்கு, இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு என தொங்கிக் கொண்டிருக்கிறது. இவற்றில் ஏதாவது ஒரு வழக்கில் அவர் தண்டனை பெற்று சிறைக்கு செல்வார் என்ற அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியும் ஆட்சியும்
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுக தொண்டர்கள் தாயை இழந்த பிள்ளைகள் போல தத்தளித்துக் கொண்டுள்ளனர். ஒரு ஓட்டுக்கு 3 முதல்வர்களை பார்த்து விட்டது தமிழகம். அதிமுகவினருக்கு ஓட்டு போட்டு இன்னும் என்னென்ன அனுபவிக்கணுமே என்று ஆதங்கப்படுகின்றனர் தமிழக மக்கள்.