கதிராமங்கலம் கிராம மக்களுடன் இன்று அமைதி பேச்சுவார்த்தை: கலெக்டர் அண்ணாதுரை
தஞ்சாவூர்: கதிராமங்கலம் கிராம மக்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓன்ஜிசி எண்ணெய்க் குழாய்களை புதிதாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு வாரமாகவே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கைவிடப்பட்ட எண்ணெய்க் குழாய்களை மாற்றும் பணியை ஓஎன்ஜிசி மேற்கொண்டு வருகிறது. இதனை கண்டிக்கும் விதமாக கதிராமங்கலத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.
இந்நிலையில் கதிராமங்கலத்தில் தஞ்சாவூர் ஆட்சியர் அண்ணாதுரை ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித் அவர், கதிராமங்கலம் கிராம மக்களுடன் திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறினார்.
மேலும் கிராம மக்கள் தெரிவிக்கும் கருத்தை ஓஎன்ஜிசி நிறுவனத்திடம் தெரிவிக்கப்படும். மக்களின் பாதுகாப்பு 100 சதவீதம் உறுதி செய்யப்படும். பொதுமக்கள் அச்சமின்றி இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக 2 ஆழ்துழை கிணறுகள் அமைக்கபடும். எண்ணெய் கசிவு ஏற்பட்ட குழாய்கள் சரிசெய்யப்பட்டுள்ளதால் பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை. இயல்பு நிலை திரும்பியுள்ளதால் 90 சதவீதம் போலீசார் திரும்பப் பெறப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.