ஹோட்டல்களுக்கு எமனாக மாறும் ஜிஎஸ்டி.. கையேந்தி பவன்களைத் தேடி ஓடும் மக்கள்!
ஜிஎஸ்டி வரியால் ஹோட்டல்களில் மக்களின் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
சென்னை: ஜிஎஸ்டி வரியால் ஹோட்டல்களில் மக்களின் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது. அதேநேரத்தில் சாலையோர கையேந்தி பவன்களில் கூட்டம் அலை மோதத் தொடங்கியுள்ளது.
மத்திய அரசு கடந்த ஒன்றாம் தேதி முதல் ஒரே நாடு ஒரே வரி என்ற நோக்கத்தில் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியது. இதன் மூலம் ஹோட்டல்களுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹோட்டல் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர். ஆனாலும் அரசு தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஹோட்டல்களில் தவிர்ப்பு
18 சதவீத வரி என்பது மிக அதிகம் என கருதும் வாடிக்கையாளர்கள் ஹோட்டல்களில் சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றனர். வேலை நிமித்தமாக சென்னை வரும் மக்கள் ஹோட்டல்களில் சாப்பிடுவதற்கு பதில் சாலையோர கடைகளுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
வார இறுதி நாட்களில்
வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் ஹோட்டல்களில் சாப்பிடும் மக்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. பெரும்பாலான மக்கள் சாலையோரா கடைகளில் பார்சல் வாங்கிச்செல்லும் வாடிக்கையை தொடங்கியுள்ளனர்.
புதிய உணவு வகைகள்
வாடிக்கையாளர்களின் வரத்து அதிகரிப்பால் சாலையோரக் கடைகளிலும் நாள்தோறும் புதிய உணவு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. மொத்தத்தில் ஜிஎஸ்டி வரியால் பெரிய பெரிய பிராண்டட் ஹோட்டல்கள் வாடிக்கையாளர்ள் எண்ணிக்கை குறைந்து ஈ ஓட்டத் தொடங்கியுள்ளனர்.
களைக்கட்டும் கையேந்தி பவன்கள்
அதேநேரத்தில் கையேந்திபவன்களின் விற்பனை களைகட்டியுள்ளது. கடை திறந்த சிறிது நேரத்திலேயே உணவு வகைகள் தீர்ந்துவிடுவதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.