எங்கிருந்தோ வந்து.. நம்மையெல்லாம் படிக்கச் செய்து.. பாராட்டுக்குரிய வீலரும், மோரியூவும்!
சென்னை: இந்தியாவில் உள்ள எந்த பெரிய ரயில்வே சந்திப்பாக இருந்தாலும் அங்கு இந்த புத்தக நிலையத்தைப் பார்க்கலாம். அதுதான் ஏ.எச். வீலர் அன் கோ என்ற பெயரிலான புத்தக நிறுவனம். இந்த புத்தக நிலையத்தை உருவாக்கியவர் இந்தியர் அல்ல என்பதுதான் இங்கு சுவாரஸ்யமானது. ஆனால் இந்திய ரயில் நிலையங்களின் தவிர்க்க முடியாத முக்கிய அடையாளமாக இன்று வரை வீலர் புத்தக நிலையங்கள் இருப்பது வியப்புக்குரியது.
மிகப் பெரிய புத்தக ஆர்வலரான எமிலி எடுவர்ட் மோரியூ என்பவர் உருவாக்கிய புக் ஸ்டால்கள்தான் இவை. எப்போது தெரியுமா... 1877ம் ஆண்டு.
இந்தியாவில் மட்டுமல்ல, பல்வேறு நாடுகளில் இந்த புத்தக ஸ்டால்களை அவர் உருவாக்கினார். இன்று அவை அனைத்தும் பாரம்பரிய அடையாளமாக மாறிப் போயுள்ளன.

20 வயதில்
இந்தியாவில் முதல் ரயில் நிலைய புத்தக ஸ்டாலை மோரியூ நிர்மானித்தபோது அவருக்கு வயது 20தான். ஸ்டால் திறக்கப்பட்ட இடம் அலகாபாத் ரயில் நிலையம். அப்போது பேர்ட் அன்ட் கம்பெனி என்ற நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார் மோரியூ.

ரயில்வே காண்டிராக்ட் குடும்பம்
மோரியூவின் குடும்பத்தினர் அப்போது ரயில்வே காண்ட்ராக்ட் பணிகளுக்குத் தேவையான ஆட்களைத் தேர்வு செய்து கொடுத்து வந்தனர். அந்த நிறுவனம்தான் பேர்ட் அன்ட் கம்பெனியாகும். இதில் மோரியூவின் இரு மாமாக்கள், அவரது தாயார் ஆகியோர் பார்ட்னர்களாக இருந்தனர்.

பிரெஞ்சுக்காரர்
மோரியூவின் தந்தை அகஸ்டே மோரியூ பிரான்சைச் சேர்ந்தவர். இவரது தாயாரின் பெயர் மேரி பேர்ட். பிரான்சின் ஓய்ஸே நகரில் பிறந்தவர் மோரியூ. 17 வயதில் கப்பல் மூலம் இந்தியாவுக்கு வந்தார்.

தாத்தா வழியில்
மோரியூவின் தாத்தா ஜேம்ஸ் பேர்ட் ஒரு புத்தக வியாபாரி ஆவார். மேலும் கவிஞரும் கூட. சிறு சிறு எழுத்தாளர்களை ஊக்குவிப்பார். அவர்களது படைப்புகளை இவரே புத்தகமாக போடுவார். இவர் பின்னர் கனடாவுக்கு இடம் பெயர்ந்தார். அங்கு ரயில் நிலையத்தில் முதல் முறையாக புத்தக கடைகளைப் போட்டவர் இவர்தான்.

ஐரோப்பாவுக்கு அறிமுகம்
அப்போது ஐரோப்பிய ரயில் நிலையங்களில் புத்தக ஸ்டால் என்று எதுவும் இருக்காது. அதை முதன் முதலில் செய்தவர் இந்த தாத்தாதான். பாரீஸ் ரயில் நிலையத்தில் முதலில் புத்தக ஸ்டாலைப் போட்டார். பின்னர் படிப்படியாக பல நகரங்களுக்கும் இடம் பெயர்ந்தார்.

தாத்தாவைப் போலவே பேரனும்
தாத்தா வழியைப் பின்பற்றியே மோரியூவும் இந்திய ரயில் நிலையங்களில் புத்தக ஸ்டால் போடும் திட்டத்தைத் தொடங்கினார். முதலில் அலகாபாத்தில் ஆரம்பித்தார்.

வந்து சேர்ந்தார் வீலர்
இந்த நிலையில்தான் மோரியூவின் புத்தக ஸ்டால் குறித்துக் கேள்விப்பட்டு அவரை அணுகினார் அவரது நண்பரான ஏ.எச். வீலர். தனது வீட்டு நூலகத்தில் ஆயிரக்கணக்கி்ல் புத்தகங்கல் இருப்பதாகவும், அவற்றை விற்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

ரயில் நிலையத்துக்கு வந்த புத்தகங்கள்
இதையடுத்து அந்தப் புத்தகங்களை வாங்கிய மோரியூ, அதை ரயில் நிலையத்திற்குக் கொண்டு வந்து வைத்து விற்பனை செய்தார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து வீலர் மற்றும் மேலும் சிலருடன் இணைந்து ஏ.எச். வீலர் அன் கோ என்ற புத்தக நிலையத்தை உருவாக்கினார் மோரியூ. பின்னர் வீலர் லண்டன் திரும்பி விட்டார்.

அலகாபாத் - லண்டனில் அலுவலகம்
இந்த நிறுவனத்தில் வீலர், மோரியூ, ரூட்ஜ், ஆர்மீனியாவைச் சேர்ந்த டைக்ரன் ராத்தியூஸ் டேவிட்., ஆர்தர் லிஸ்லி வீலர் ஆகியோர் பார்ட்னர்களாக இணைந்தனர். அலகாபாத் மற்றும் லண்டனில் அலுவலகமும் திறந்தனர்.

விற்பனையாளராக இருந்து பதிப்பாளராக
புத்தக விற்பனை மூலம் கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து அடுத்த லெவலுக்கு மாறினார் மோரியூ. அதாவது பப்ளிஷர் ஆனார். இந்த நிலையில் கிழக்கு இந்திய ரயில்வே நிர்வாகம் வீலர் புத்தக ஸ்டாலை மேலும் பல ரயில் நிலையங்களுக்கு விரிவுபடுத்த அனுமதித்தது.

விஸ்வரூப வளர்ச்சி
இப்படியாக வளர ஆரம்பித்த வீலர் அன் கோ நிறுவனம் மிகப் பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்தது. இந்தியாவின் புத்தக விற்பனை வரலாற்றிலும் தனி இடம் பிடித்தது. 1917ம் ஆண்டு, உலகப் போர் முடிவுக்குப் பின்னர் இந்த நிறுவனம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. லண்டனை தலைமையிடமாகக் கொண்ட ஆர்தர் எச். வீலர் அன் கோ எனவும், இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஏ.எச். வீலர் அன் கோ எனவும் பிரிக்கப்பட்டது.

1937ல் மறைந்தார்
1937ம் ஆண்டு மோரியூ மறைந்தார். ஆனால் அவரது மரணம், இந்திய புத்தகத் துறைக்கு மிகப் பெரிய இழப்பு. காரணம் ஒரு புக் செல்லராக, பப்ளிஷராக இந்திய புத்தகத் துறைக்கு மோரியூ செய்த சேவை மிகப் பெரியது, வியப்புக்குரியது. தனது கடைசிக்காலம் வரை புத்தக விற்பனையிலும், பப்ளிஷிங்கிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தவர் இந்த மோரியூ. இன்றும் கூட இந்தியாவின் முக்கிய ரயில் நிலையங்களில் வீலர் கடைகளைப் பார்க்கலாம்.

ஹிக்கின்பாதம்ஸ்
இதேபோல இந்திய மக்களிடையே பிரபலமானது ஹிக்கின்பாதம்ஸ் புத்தக நிறுவனம். உண்மையில் இது வீலருக்கும் சீனியராகும். இங்கிலாந்தைச் சேர்ந்த நூலகரான அபெல் ஜோஷுவா ஹிக்கின்பாதம் உருவாக்கிய விற்பனையகம்தான் இந்த ஹிக்கின்பாதம்ஸ். சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு அமைக்கப்பட்ட இந்த விற்பனையகம் இன்று தென்னிந்தியாவின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக உள்ளது. 1840களில் ஹிக்கின்பாதம்ஸ் விற்பனையகத்தை உருவாக்கினார் ஹிக்கின்பாதம். அந்த வகையில் இது இந்தியாவின் மிகப் பழமையான புத்தக விற்பனையகம் என்ற பெருமையையும் கொண்டதாகும்.

அண்ணா சாலையின் கம்பீர அடையாளம்
சென்னை அண்ணா சாலையில் கம்பீரமாக காட்சி தரும் கட்டடத்தில்தான் முதல் ஹிக்கின்பாதம்ஸ் கடை திறக்கப்பட்டது. இன்று வரை அந்த கடை செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அண்ணா சாலையின் கம்பீர அடையாளங்களில் ஹிக்கின்ஸும் ஒன்றாகும். தமிழகத்திலும், பிற தென்னிந்திய மாநிலங்களிலும் 22 கிளைகளுடன் ஹிக்கின்பாதம்ஸ் தொடர்ந்து கம்பீரமாக இயங்கி வருவது முக்கியமானது.
வெள்ளையர்களும், ஐரோப்பியர்களும் என்னதான் நம்மைப் பொறுத்தவரை ஏகாதிபத்தியவாதிகளாக இருந்தாலும் கூட நமக்கு நிறைய நல்லதையும் செய்திருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.












Click it and Unblock the Notifications