சென்னையை குளிர்விக்கும் வடகிழக்குப் பருவமழை.. எப்போது தொடங்கும்?
தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவை தரும் வடகிழக்குப் பருவ மழை நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவை தரும் வடகிழக்குப் பருவ மழை நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழைகள் பொய்த்ததால் கடும் வறட்சி நிலவியது. கடந்த கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர்.
வறட்சியால் வரலாறு காணாத அளவுக்கு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை தமிழகத்திற்கு ஓரளவு கைகொடுத்துள்ளது.
தொடங்காத வடகிழக்குப் பருவமழை
இதனால் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி விவசாயிகளை மகிழ்ச்சியடைச் செய்துள்ளது. இந்நிலையில் தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவை தரும் வடகிழக்குப் பருவமழை இதுவரை தொடங்காமல் உள்ளது.
தமிழகத்திற்கு 60 சதவீதம்
வழக்கமாக அக்டோபர், நவம்பர் டிசம்பர் என 3 மாதங்கள் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்யும். இதனால் தென்மேற்கு பருவமழையின் போது குறைந்த அளவு மழையை பெரும் தமிழகம், வடகிழக்குப் பருவமழையின் போது 60 சதவீதம் வரை மழையை பெறும்.
வடகிழக்குப் பருவமழை எப்போது?
இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை சராசரியாக பெய்யும் என கூறப்படுகிறது. இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காற்றழுத்த தாழ்வு நிலை - வாய்ப்பு
இதனிடையே அடுத்த 24 மணிநேரத்தில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது. இது வடகிழக்கு பருவமழைக்கு ஒரு தூண்டுகோளாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.