போக்குவரத்து அமைச்சருடனான பேச்சில் உடன்பாடு இல்லை எனில் செப். 24 முதல் ஸ்டிரைக்!
போக்குவரத்துத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியப் பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
சென்னை: வேலைநிறுத்தத்தை தொடங்குவது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியப் பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான 12வது ஊதிய ஒப்பந்தம், முடிந்து ஓராண்டிற்கு மேலாகியும் இன்னும், புதிய ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை. இதுதொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.
இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாயினர். இந்நிலையில் புதிய ஒப்பந்தத்தை அமல்படுத்தக்கோரி வரும் 24ம் தேதி, வேலைநிறுத்தத்தை தொடங்கப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன.
இதையடுத்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள, தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில், இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. தனி துணை கமிஷனர் யாஸ்மின் பேகம் உள்ளிட்டடோர் தலைமையில், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் செப்டம்பல் 23 முதல் 26ஆம் தேதிக்குள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கருடன் பேச்சுவார்த்தை நடத்து முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது கோரிக்கைகள் குறித்து அமைச்சருடன் பேசி இறுதிக்கட்ட முடிவு எடுக்கப்படும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் அறிவித்தப்படி ஸ்ட்ரைக் தொடங்கும் என்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.