கூடங்குளத்தில் 3, 4-வது அணு உலை பூமி பூஜை: உதயகுமார் கடும் எதிர்ப்பு
நெல்லை: கூடங்குளத்தில் 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதற்கு அணு உலை எதிர்ப்பு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில், நிர்மானப் பணிகள் முடிந்த நிலையில் முதல் அணு உலையில் மின்உற்பத்தி நடைபெற்று வந்தது. பராமரிப்பு பணிக்காக கடந்த ஜூன் 25-ம் தேதி முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
ஏழு மாதங்களுக்கு பிறகு பராமரிப்பு பணிகள் முடிவடைந்து, எரிபொருள் நிரப்பப்பட்டு, கடந்த ஜனவரி 30ம் தேதி மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. மின் உற்பத்தி படிப்படியாக அதிகரித்து பிப்ரவரி 4-ம் தேதி 816 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், கடந்த சனிக்கிழமை நீராவி குழாயில் பழுது ஏற்பட்டது. அன்று இரவு முதல் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டு மராமத்து பணிகள் நடைபெற்று வந்தன.
மராமத்து பணிகள் முடிவடைந்து, 14-ம் தேதி இரவு 10 மணிக்கு மேல் முதல் அணு உலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது. அன்றைய தினம் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. படிப்படியாக மின்உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை 6 மணி அளவில், திடீரென குழாய் ஒன்றில் பழுது ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து உடனடியாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
கூடங்குளத்தில் 2-ஆவது அணு உலையின் பணிகள் முடிவடைந்த நிலையில், சில மாதங்களில் மின் உற்பத்தி தொடங்கும் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. இதில் அணு உலை திட்ட இயக்குநர் டி.ஏ. பிள்ளை, வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் உள்ளிட்ட ரஷ்ய விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அணு உலை எதிர்ப்பு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறுகையில், கூடங்குளத்தில் முதல் 2 அணு உலைகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வரும் வேளையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி 3-வது, 4-வது அணு உலைகள் கட்ட பூஜை போடப்பட்டுள்ளது.
புதிய அணு உலை அமைப்பதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் இது தொடர்பாக, தமிழக அரசு, தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். புதிய இரு அணு உலைகளையும் கட்டவிட மாட்டோம். உயிரை கொடுத்தாவது தடுப்போம்.போராட்டம் குறித்து விரைவில் முடிவு செய்வோம் என தெரிவித்தார்.