முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னி குவிக்குக்கு அரசு விழா எடுக்க கோரிக்கை
தேனி: முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னி குவிக் நினைவை போற்றும் வகையில் அரசு விழா நடத்த வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்னர்.
கடந்த ஆண்டு பென்னிகுவிக் நினைவாக மாட்டுப் பொங்கல் தினத்தன்று தமிழக அரசு தமிழறிஞர்களுக்கு விருது கொடுத்துக் கெளரவித்தது. அதேபோல பென்னிகுவிக் மணிமண்டபத்தையும் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
மேலும் பென்னிகுவிக் பெயர் தாங்கிய தேனி பஸ் நிலையத்தையும் முதல்வர் திறந்து வைத்தார். இந்த நிலையில் இந்த மாட்டுப் பொங்கல் தினத்தன்றும் பென்னிகுவிக் நினைவாக அரசு விழா எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பெரியாற்றின் மீது
முல்லை பெரியாறு அணை மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி மேற்கு நோக்கி பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும். இது தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ளது.
ஜான் பென்னிகுயிக் போட்ட திட்டம்
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், மேஜர் ஜான் பென்னிகுயிக் என்பவர் 1882 ம் வருடம் இந்த அணையைக் கட்டும் திட்டத்தைத் தயாரித்தார்.
பிரமாண்ட அணை
இத் திட்டத்தின்படி ஆற்றின் அடிப்பகுதியிலிருந்து 155 அடி உயரமும், ஆற்றின் தளத்திற்கு கீழே 18 அடி ஆழமும் அணையின் மேல் 4 அடி அகலத்தில் 5 அடி உயரக் கைப்பிடிச்சுவர் ஒன்றும் கட்ட முடிவு செய்யப்பட்டது.
வாய்க்கால் வழியாக
இத் திட்டத்தின்படி அணையை அடைத்துத் தேங்கியிருக்கும் தண்ணீரை எதிர்ப்புறத் திசையிலிருந்து வாய்க்கால் வழியே கொண்டு வருவது என்றும் இந்த வாய்க்காலின் நீளம் 6500 அடியாகவும் இதற்கான் தலைமை மதகின் தரை மட்டம் 109 அடி என்றும் தீர்மானிக்கப்பட்டது.
சுரங்கம் அமைத்து
மேலும், இங்கிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதிக்குத் தண்ணீரைக் கொண்டு செல்ல மலையினுள்ளே 5900 அடி வரை சுரங்கம் அமைத்து இதன் வழியே வைரவன் ஆற்றில் கலந்து அப்படியே அதைச் சுருளி ஆற்றில் கலந்து வைகை ஆற்றுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டது.
1895ல் தொடங்கிய பணி
இதற்கான திட்டத்தை ஆங்கிலேய அரசின் பார்வைக்கு வைத்து அனுமதி பெற்றார். எழுபத்தைந்து லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 1895 ம் வருடம் அக்டோபர் 11 ம் தேதி அன்றைய சென்னை மாகாண அரசின் கவர்னர் வென்லாக் முன்னிலையில் அணை கட்டும் பணிகள் துவங்கப்பட்டது.
பிரிட்டிஷ் ராணுவக் கட்டுமானத்துறை
ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னி குவிக் தலைமையில் பிரிட்டிஷ் ராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது.
கடும் சிரமத்திற்கு மத்தியில் கட்டப்பட்ட அணை
அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், காட்டு மிருகங்கள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாறு போன்றவைகளையும் பொருட்படுத்தாமல் மூன்று ஆண்டுகள் பல்வேறு கஷ்டத்துடன் அணை கட்டப்பட்டது.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அணை
அணை கட்டுமான பணிகள் பாதி முடிவந்த நிலையில், தொடர்ந்து பெய்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக அணையின் கட்டுமான பணிகள் அடித்துச் செல்லப்பட்டது.இதன் காரணமாக, இந்தத் திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மறுத்துவிட்டது.
சொத்தை விற்று கட்டிய பென்னி குவிக்
இந்த நிலையில் கர்னல் பென்னி குவிக் இங்கிலந்திற்குத் திரும்பிச் சென்று தன் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் வெற்றிகரமாக கட்டி முடித்தார்.
5 மாவட்ட விவசாயிகளுக்காக
இதனால், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டப் பகுதியில் விவசாயம் நடைபெறுவதற்கும், இந்த மாவட்டங்களை சேர்ந்த பொது மக்களுக்கு குடி நீர் கிடைத்து வருகின்றது.
இடம் கேரளா.. அணை தமிழகத்திற்கு
இது கட்டப்பட்ட இடம் கேரளாவுக்கும், அணை தமிழகத்திற்கும் உரியது. தற்போது, இந்த அணையை, தமிழக பொதுப் பணித்துறை பராமரித்து வருகிறது.
மணிமண்டபம்
கர்னல் பென்னி குக் செயலை பாராட்டி, நினைவு கூறும் வகையில், கர்னல் ஜான் பென்னிகுவிக் நினைவு மண்டபம், தேனி மாவட்டம் லோயர் கேம்பில் 1.25 கோடியில் தமிழக அரசு கட்டி கவுரப்படுத்தியது. 2013 ம் வருடம் ஜனவரி 15 ம் தேதி அவரது பிறந்த நாள் அன்று அவரது மணிமண்டபத்தை தமிழக முதல்வர் ஜெயலிலதா திறந்து வைத்தார். தமிழறிஞர்களுக்கு பரிசுகள், விருதுகள் வழங்கி கவுரப்படுத்தினார்.
ஜனவரி 15ல் விழா எடுக்க கோரிக்கை
கர்னல் ஜான் பென்னிகுவிக் நினைவு மண்டபம் திறக்கப்பட்டு, ஓராண்டு நிறைவடையும் நிலையில் உள்ள நிலையிலும், பொங்கல் திருநாளை முன்னிட்டும், ஜனவரி 15 ம் தேதி அன்று அரசு விழா கொண்டாட வேண்டும் என்று தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டப் பகுதி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.