கைது செய்துள்ளவர்களை விடுவித்தால்தான் பேச்சுவார்த்தை.. உறுதியாக கூறிய கதிராமங்கலம் கிராம மக்கள்!
கைது செய்துள்ளவர்களை விடுவித்தால்தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என கதிராமங்கலம் கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
கும்பகோணம்: கைது செய்துள்ளவர்களை விடுவித்தால்தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என கதிராமங்கலம் கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதனால் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 7 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது.கடந்த 30-ந் தேதி எண்ணெய் குழாய் உடைந்து கசிவு ஏற்பட்டது.
இதையடுத்து எண்ணெய் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது கசிவு ஏற்பட்ட பகுதியில் யாரோ தீ வைத்ததால், பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

9 பேர் கைது
இதனால் பெரும் களேபரம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடையடைப்பு போராட்டம்
கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி கதிராமங்கலத்தில் கடந்த 3 நாட்களாக கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. பள்ளி மாணவர்களும் வாயில் கறுப்புத்துணிக்கட்டி போராட்டம் நடத்தினர்.

போலீசார் குறைப்பு
இதற்கிடையே ஓ.என்.ஜி.சி. எண்ணெய் குழாயில் ஏற்பட்ட கசிவு சரிசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கதிராமங்கலத்தில் தற்போது இயல்பான நிலை நிலவுவதால் அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசார் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
இதனிடையே திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதில் கதிராமங்கலம் பொதுமக்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
Recommended Video


நிபந்தனை விதித்த கிராம மக்கள்
ஆனால் கைது செய்துள்ளவர்களை விடுவித்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவோம் என கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அதுவரை அமைதியான வழியில் தங்களின் போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications