நீங்க எல்லாம் தீபாவளி கொண்டாடினீங்களே, இவங்க யாரும் கொண்டாடல தெரியுமா?
சென்னை: தீபாவளி என்றால் புத்தாடை, இனிப்பு, பட்டாசுகள் என்று அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடும் வேளையில் சிலர் மட்டும் கொண்டாடாமல் அன்றும் கூட கடினமாக உழைக்கிறார்கள்.
பண்டிகை என்றாலே நம் மனதில் மகிழ்ச்சி பொங்கும். புதன்கிழமை தான் தீபாவளி பண்டிகையை மக்கள் கொண்டாடினர். புத்தாடை அணிந்து, இனிப்புகள் உண்டும், பிறருக்கு கொடுத்தும், தெருவெல்லாம் குப்பைக்காடாக மாறும் அளவுக்கு பட்டாசுகள் வெடித்தும் மக்கள் கொண்டாடினர்.
இந்நிலையில் தீபாவளி அன்று எந்தவித கொண்டாட்டமும் இல்லாமல் சிலர் வேலை பார்த்தார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? இன்னும் சொல்லப்போனால் அவர் ஆண்டுதோறும் பண்டிகைகளை கொண்டாடாமல் வேலை தான் பார்க்கிறார்கள்.
பேருந்து ஓட்டுனர்கள்
பண்டிகையை குடும்பத்தாருடன் கொண்டாட சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்கிறார்கள். ஆனால் பேருந்து ஓட்டுனர்களோ பண்டிகையை கொண்டாடாமல் உழைக்கிறார்கள்.
பால்காரர்கள், பூ விற்பவர்கள்
பால்காரர்களும், பூ விற்பவர்களும் தீபாவளி அன்று கூட வியாபாரம் செய்ய வந்துவிடுகிறார்கள். அன்று தானே அவர்களின் வியாபாரம் களைகட்டும். அதை விட்டுவிட முடியாமல் கொண்டாட்டத்தை கைவிடுகிறார்கள்.
தியேட்டர் ஊழியர்கள்
தீபாவளி என்றால் அன்றைய தினம் புதுப்படங்கள் ரிலீஸாகும். மக்கள் ஜாலியாக தியேட்டருக்கு சென்று படம் பார்க்க தியேட்டர் ஊழியர்கள் பண்டிகையை கொண்டாடாமல் வேலை பார்க்கிறார்கள். அன்று தான் அவர்களுக்கு கூடுதல் வேலை இருக்கும்.
ஹோட்டல்கள்
பண்டிகை நாள் அன்று வீட்டில் சமைக்காமல் ஹோட்டல்களுக்கு சென்று சாப்பிடுவோர் ஏராளம். பண்டிகை வியாபாரத்தை கவனிக்க ஹோட்டல் ஊழியர்களுக்கு கொண்டாட்டம் இல்லாமல் போகிறது. அவர்களால் பண்டிகையை கொண்டாடும் மக்களை ஏக்கமாக பார்க்கத் தான் முடிகிறது.
போலீஸ்
போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசாருக்கும் தீபாவளி கொண்டாட்டம் எல்லாம் இல்லை. பண்டிகை அன்று எந்தவித அசம்பாவிதங்களும் நடந்துவிடாமல் இருக்க அன்று தான் கூடுதல் கவனமாக இருக்க வேண்டி உள்ளது.
காவலாளிகள்
வீடு மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் காவலாளிகளுக்கும் தீபாவளி கொண்டாட்டம் இல்லை. பாவம் அன்று கூட அவர்கள் வாசலை காவல் காத்துக் கொண்டு தான் நிற்கிறார்கள்.
மால்கள்
பண்டிகை அன்று ஷாப்பிங் மால்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். அதனால் மால்களில் பணிபுரியும் நபர்களுக்கும் தீபாவளி கொண்டாட்டம் கிடையாது.
பத்திரிக்கையாளர்கள்
பண்டிகை விடுமுறை, கொண்டாட்டம் என்பது பிறருக்கு தான், பத்திரிக்கையாளர்களுக்கு இல்லை. அவர்கள் பண்டிகை நாள் அன்றும் பரபரப்பாக செய்தி வெளியிட்டுக் கொண்டிருப்பார்கள்.