மூன்றாவது நீதிபதி மீது நம்பிக்கை.. தம்பிதுரை பேட்டி
எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்க வழக்கில் மூன்றாவது நீதிபதி நல்ல தீர்ப்பு வழங்குவார் என தம்பிதுரை நம்பிக்கை
சென்னை: 18 எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்க வழக்கில் மூன்றாவது நீதிபதி நல்ல தீர்ப்பு வழங்குவார் என்று நம்புவதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.
லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை செய்வது தொடர்பாக ஜெயலலிதா கொள்கை முடிவு எடுத்துள்ளார். அதன்படி அதிமுக அரசு அவர்களை விடுதலை செய்ய தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும். 7 பேர் விடுதலை என்பது அதிமுக அரசின் கொள்கை முடிவு. இந்த வழக்கில் எதிர்க்கட்சியினர் செய்ய வேண்டியதை எல்லாம் விட்டுவிட்டு இப்போது எங்களை வந்து குறைசொல்லிக்கொண்டிருக்கிறார்கள்" என்று கூறினார்.
நெடுஞ்சாலைத் துறையில் ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தம்பிதுரை, "நெடுஞ்சாலைத் துறையில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை. நெடுஞ்சாலை ஒப்பந்தங்கள் எல்லாம் முறையாகப் போடப்பட்டுள்ளன. அப்படி ஏதாவது முறைகேடு நடந்திருந்தால் மற்றவர்கள் அனைவரும் இந்நேரம் நீதிமன்றத்துக்குச் சென்று வழக்கு தொடர்ந்திருப்பார்கள். அதனால், முறைகேடு எதுவும் நடக்கவில்லை." என்று கூறினார்.
18 எம்.எல்.ஏ.-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் தம்பிதுரையிடம் கருத்து கேட்டபோது, "எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்க வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதைப்பற்றி கருத்து கூறுவது சரியாக இருக்காது. இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதி விரைவில் நல்ல தீர்ப்பு வழங்குவார் என்று நம்புகிறேன். இப்போது வந்திருக்கும் தீர்ப்பால் ஆட்சிக்கு பாதிப்பில்லை என்பதால் மக்களுக்கும் பாதிப்பில்லை என்றுதான் அர்த்தம். இந்த தீர்ப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் அரசியல் செய்து கொண்டிருப்பார்கள்தான், அதையெல்லாம் பொருட்படுத்த தேவையில்லை" என்று கூறினார்.