சுவாதி கொலை விவகாரம்... சட்டவிரோதமாக கூறியிருந்தால் என்னை கைது செய்யட்டுமே... சொல்வது திருமா
சென்னை: சாப்ட்வேர் என்ஜினியர் சுவாதி கொலை தொடர்பாக சட்டவிரோதமாக தாம் கூறியிருந்தால் போலீசார் கைது செய்யட்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
சுவாதியை கொலை செய்ததாக நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் சுவாமி மதம் மாறி காதலித்த காரணத்தால் ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என திருமாவளவன் கூறி வருகிறார்.
திருமாவளவனின் கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவரது கருத்துக்கு பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
ஹெச் ராஜா சொன்னது...
இது தொடர்பாக பதிலளித்த தொல். திருமாவளவன், சட்டத்திற்கு விரோதமாகவோ, சமூகத்திற்கு விரோதமாகவோ நான் எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. குறிப்பிட்ட சமூகத்தைக் காயப்படுத்தும் விதமாகவும் சொல்லவில்லை. ஹெச்.ராஜா போன்றவர்கள் எழுப்பிய கேள்விகளையே நானும் முன்வைக்கிறேன். ராம்குமார் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்று ஹெச்.ராஜாவே ஒரு இடத்தில் சொல்கிறார்.
போலீஸ் மீது சந்தேகம்
தொடக்கத்தில் ராம்குமாருக்கு ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, கைது செய்தபோது கழுத்தை ராம்குமார் அறுத்துக் கொள்ளவில்லை. போலீஸார்தான் கழுத்தை அறுத்தனர். கொலைக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை என தமிழகக் காவல்துறை மீது சந்தேகம் எழுப்பினார்.
நாங்கதான் களத்தில்..
பட்டப்பகலில் ஒரு பெண் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இதைக் கண்டித்து முதன்முதலில் ஆர்ப்பாட்டம் நடத்தியதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான். வேறு யாரும் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகத் தெரியவில்லை.
பழி சொல்லவில்லை
இந்த வழக்கில் முதலில் கேள்வி எழுப்பியது ஒய்.ஜி.மகேந்திரன். அதன்பிறகு ஹெச்.ராஜா, வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள்தான் பேசி வந்தனர். என்னைக் கைது செய்ய வேண்டும் என அவர்கள் சொல்வதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரையில், எந்தச் சமூகத்தையும் பழி சொல்லவில்லை.
சுவாதி குடும்பத்தைக் காயப்படுத்தும்விதமாகவும் எதையும் சொல்லவில்லை. நான் சொல்வது சட்டத்திற்கு விரோதமாக இருந்தால், கைது நடவடிக்கை எடுக்கட்டும் என்றார்.