தமிழிசை பா.ஜ.க. தலைவரா? சென்ஸார் போர்டு தலைவரா?... திருநாவுக்கரசர் கண்டனம்!
மெர்சல் படத்திற்கு எதிரான தமிழிசையின் கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழிசை சவுந்தர்ராஜன் பாஜக தலைவரா அல்லது சென்சார் போர்டு சேர்மனா என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் மெர்சல் படத்திற்கு எழுந்துள்ள சர்ச்சை குறித்து தந்தி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது : விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தில் ஒரு காட்சியில் வடிவேலுவிடம் விஜய் பர்சில் பணம் இருக்கிறதா என்று கேட்கிறார். அதற்கு அவர் பர்ஸ் காலி என்று சொல்லிவிட்டு, இந்தியாவில் உள்ள யாரிடமும் பணம் இல்லை என்று பணமதிப்பிழப்பை குறிக்கும் வகையில் கூறுகிறார்.
வடிவேலு அந்த டயலாக்கை சொல்லும் போது திரையரங்கில் ஏராளமான கைத்தட்டல்கள். மக்கள் இந்த வசனத்தை வரவேற்கிறார்கள். அதே போன்று மற்றொரு காட்சியில் விஜய் சிங்கப்பூரில் குறைவான வரி வசூலிக்கிறார்கள் ஆனால் மருத்துவம், கல்வி இலவசமாகத் தருகிறார்கள். ஆனால் இந்தியாவில் அதிக வரி வசூலிக்கிறார்கள், இலவசம் கொடுக்கிறார்கள், ஆனால் மருந்து மாத்திரை மட்டும் இலவசமாக கொடுக்க மாட்டார்களா என்று பேசுகிறார்.
சினிமாவின் சுதந்திரம்
அது நடைமுறை சாத்தியமா என்று விஜய் அந்தக் காட்சியில் கேட்கிறார். ஊடகங்களில் ஒரு கருத்தைக் கூற சுதந்திரம் இருப்பது போலத் தான் சினிமாவும். மக்களின் கருத்துகளைத் தான் சினிமா பிரதிபலிக்கிறது.
ஆரோக்கியமானதாக பார்க்க வேண்டும்
அந்தக் காட்சிகள் வேண்டுமா வேண்டாமா என்று மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். மக்கள் இவற்றை ரசிக்கிறார்கள், வரவேற்கிறார்கள். இதை ஆரோக்கியமானதாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர அதை சர்ச்சையாக்கக் கூடாது.
பாஜகவிடம் காட்ட வேண்டுமா?
மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், அதனால் விஜய் பேசும் வசனத்தை வரவேற்கிறார்கள். பாஜகவை பாராட்டியே தான் திரைப்படமும் எடக்க வேண்டுமா. ஊடகம், சினிமாத் துறைக்கு என கருத்து சுதந்திரம் இருக்கிறது அதில் தலையிடக் கூடாது. தமிழிசை என்ன பாஜகவின் தலைவரா அல்லது சென்சார் போர்டு சேர்மனா. படத்தை சென்சார் போர்டில் தான் காட்ட வேண்டும், இனி என்ன பாஜகவிடம் காட்டி அந்த வசனம், காட்சிகள் எல்லாம் அவர்களுக்கு ஏற்றாற் போல இருக்கிறதா என்பதை பார்த்துத் தான் வெளியிட வேண்டுமா.
காலம் காலமாக இருக்கிறது
ஜனநாயத்தை மதிக்க வேண்டுமே தவிர, மிதிக்கக் கூடாது. சினிமாவில் பஞ்ச் டயலாக் பேசுவதோ, அரசியல் சாடல்களோ எல்லா கால கட்டத்திலும் இருந்து தான் வருகிறது. எம்ஜிஆர் திமுகவை விமர்சித்து வசனம் பேசி இருக்கிறார். சிவாஜி திராவிடக் கட்சிகளை விமர்சித்து வசனம் பேசி இருக்கிறார். சுதந்திர போராட்ட காலத்திலும் கூட பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக கிண்டல் கேலிகள் உள்ளன.
ரசிகர்களுக்காக
அதே போலத் தான் இப்போதும் நடிகர்கள் அரசியல் வசனம் பேசுகிறார்கள், இது ரசிகர்களை ஈர்க்கவும் நடிகர்கள் அரசியலுக்கு வரவும் வழி வகுக்கிறது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அவர்களை ஏற்கிறார்களா இல்லையா என்பது மக்கள் கையில் தான் இருக்கிறது என்று அவர் கூறி இருக்கிறார்.