கருணாநிதியை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் சென்னை கோபாலபுரத்தில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது பெருளாளர் மு.க.ஸ்டாலின் உடன் இருந்தார். உள்ளாட்சித் தேர்தல் குறித்து திருநாவுக்கரசர் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சித்தேர்தலில் காங்கிரஸ் நிலைபாடு குறித்து பின்னர் அறிவிக்கப்படும். ராம்குமார் மரணம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாநிதியுடன் உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து பேச்சு நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் அட்டவணை எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்ற நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளை தொடங்கியுள்ளன.
திமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று முதல் 22ஆம் தேதி வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
கடந்த 2011 உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட்டது. தற்போது கூட்டணி குறித்து எந்த முடிவையும் திமுக அறிவிக்கவில்லை. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தன. எனவே, உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக கூட்டணியில் இடங்கள் ஒதுக்கப்படும் என அக்கட்சிகள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றன.
கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக ஆட்சி அமைக்காவிட்டாலும் கணிசமான வெற்றியைப் பெற்றது. குறிப்பாக சென்னையில் மாபெரும் வெற்றியை வென்றடுத்தது திமுக. கூட்டணி கட்சிகள், ஓட்டுக்கள் பிரிந்தது, அதிமுகவின் கடைசி நேர இலவச அறிவிப்புகள், திமுகவின் தேர்தல் அறிக்கை, திமுக கட்சியின் மதுவுக்கு எதிரான நிலைப்பாடு போன்ற காரணிகள் திமுகவின் தோல்விகளுக்கான காரணங்களாக அலசப்பட்டன. இக்கருத்துகளை மனதில் கொண்டு இந்த உள்ளாட்சித் தேர்தலில் வியூகம் வகுக்கத் திட்டம் வகுக்கப்படுவதாக கூறப்பட்டது. அதைச் செயல்படுத்தும் விதத்திலே திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டதாகத் தெரிகிறது.
உள்ளாட்சித் தேர்தலில் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது, வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம், தேர்தல் களத்தில் ஆளுங்கட்சியான அதிமுகவை எதிர்கொள்வது, இதுவரையிலான அதிமுக ஆட்சியில் உள்ள குறைபாடுகள் ஆகியவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதிமுக தனித்துப் போட்டியிடும் நிலையில், கடந்த 2011 தேர்தலைப் போல திமுகவும் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிடலாம் என பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜி.கே. வாசன் இன்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் கமிட்டித்தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்துப் பேசியுள்ளார். சட்டசபைத் தேர்தலின் போது தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஈவிகேஎஸ் இளங்கோவன் இருந்தார். இதனால் திமுக அணியில் ஜி.கே. வாசனால் இணைய முடியாமல் போனது. இப்போது திருநாவுக்கரசர் காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவராக வந்துள்ளதால் திமுக கூட்டணியில் தமாகா இணைய எந்த தடையும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்ற நிலையிலேயே ஸ்டாலினை சந்தித்துப் பேசியுள்ளார் வாசன்.