திருவள்ளுவர் தீர்க்கதரிசிதாங்க.... ஆதார் பற்றி அப்பவே எழுதினாராம்... கிளப்பிவிடும் நெட்டிசன்கள்
இறப்பை பதிவு செய்ய பிற்காலத்தில் ஆதார் தேவைப்படுமென்பதை 2000 ஆண்டுகளுக்கு முன்னாடியே திருவள்ளுவர் சொல்லியிருப்பதாக கிளப்பிவிட்டுள்ளனர் நெட்டிசன்கள்.
சென்னை: தற்போது எல்லாவற்றுக்கும் மத்திய அரசு ஆதார் கார்டு அவசியம் என்று கூறிவரும் நிலையில் இறப்புக்கும் ஆதார் கார்டு என அறிவித்ததாக ஒரு செய்தி வெளியானது. 2000 ஆண்டுகளுக்கு முன்னாடியே திருவள்ளுவரும் கூட ஆதார் பற்றி தெரிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு கருத்து வைரலாக பரவி வருகிறது.
மத்திய மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெற ஆதார் அவசியம் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சமையல் எரிவாயு மானியம், ரேஷன் பொருட்கள் பெற, முதியோர் உதவித் தொகை, குழந்தைகள் உண்ணும் சத்துணவு என அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இறப்பு பதிவுக்கும் ஆதார் என மத்திய அரசு அறிவித்ததாக வெளியான செய்தி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் இறப்பு பதிவுக்கும் ஆதார் அவசியம் என கூறவிட்டது மத்திய அரசு.
ஆதார் குறள்
இதனிடையே சமூக வலைதளங்களில்,
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேர ஆதார்
என்று திருவள்ளுவர் இறப்புக்கும் ஆதார் அவசியம் என்பதை அன்றே கூறியுள்ளார் என்ற பதிவு கருத்து வைரலாகி பரவி வருகிறது.
இது உண்மையா
இந்த தகவலை பார்த்து விட்டு திருக்குறளை சரிபார்க்கும் போது தான் தெரிந்தது.
அந்த குறள்-
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேராதார்.
சேராதார் என்பதை சேர ஆதார் என்று நம் நெட்டிசன்கள் பிரித்துவிட்டனர்.
உண்மையான விளக்கம்
கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார் என்கிறது சாலமன் பாப்பையாவின் உரை. இது கடவுள் வாழ்த்து பகுதியில் இடம்பெற்றுள்ள 10-ஆவது குறளாகும்.
கருணாநிதி உரை
இதே குறளுக்கு திமுக தலைவர் கருணாநிதியோ, வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும் என விளக்கம் தந்துள்ளார்.
ஆனால் இந்த குறளுக்கு நம் நெட்டிசன்கள் 'ஆதார்' அட்டையை மையமாக வைத்து எழுதிவிட்டதுதான் காலக் கொடுமை!