”தேர்தல் ரூல்ஸ்படி நீ இன்னைக்கு 10 ரூபாய்க்கு மேல பிச்சை எடுக்க கூடாது”... சொன்னாலும் சொல்வாங்க!
சென்னை: ரூபாய் 100க்கு மேல் இருந்தால் பறிமுதல் என திருவேற்காடு போலீசார் புது தேர்தல் பார்முலாவை அறிமுகப்படுத்தி உள்ளனர்.
அதிகாரிகளிடம் நிர்வாகத்தை ஒப்படைத்தால் என்ன நடக்கும்தெரியுமா? இப்படித்தான் நடக்கும்.
சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்வதற்கு கூட விசா இருக்கிறதா, பாஸ்போர்ட் இருக்கிறதா என்று கேட்கும் நிலை ஏற்படும்.
யோவ் நீ ஜாஸ்தி பிச்சை எடுத்துருக்க:
அதுவும் தேர்தல் சமயத்தில் போலீசாரின் வேட்டையை கேட்கவே வேண்டாம். அவர்களில் சிலருக்கு கை அரிப்பு ஏற்பட்டால், ‘‘ தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது. ஒரு நாளைக்கு நீ 20 ரூபாய் தான் பிச்சை எடுக்க வேண்டும். ஆனால், இன்று நீ 21 ரூபாய் பிச்சை எடுத்து இருக்கிறாய். அது தேர்தல் விதிமுறை மீறல். யார் யார் உனக்கு பிச்சை போட்டார்கள் என்று கணக்கை காண்பித்துவிட்டு, உன் பணத்தை வாங்கிச் செல்'' என்று சொன்னாலும் சொல்வார்கள்.
ஒடிசாவை சேர்ந்த தொழிலாளி:
ஒடிசாவை சேர்ந்தவர் சர்மா . சென்னை கோயம்பேடு பகுதியில் நடக்கும் மெட்ரோ ரயில் பணியில் வேலை பாக்கிறார். நேற்று முன்தினம் மாலை பெருமாள் அகரம் பகுதி வழியாக அவர் நடந்து சென்றார். அப்போது, அந்த வழியாக ரோந்து சென்ற திருவேற்காடு போலீசார் சர்மாவை மறித்து நிறுத்தினர்.
ரசீது கேட்ட ஸ்டிரிக்ட் ஆபிசர்ஸ்:
அவரிடம் எங்கே வேலை பார்க்கிறாய், எந்த ஊர், பெயர் என்னவென்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். பின்னர், சர்மாவின் பாக்கெட்டில் சோதனை செய்தனர். அதில் 2,100 இருந்தது. தேர்தல் நேரத்தில் பணத்தை கொண்டுசெல்லக்கூடாது என விதிமுறை உள்ளது,நீ இவ்வளவு பணத்தை எதற்கு கொண்டு செல்கிறாய்,இதற்கு ரசீது உள்ளதா என கேட்டுள்ளனர்.
2100க்கு இன்கம்டாக்ஸ் கணக்கு காட்டு:
அதற்கு நான் வேலை செய்ததற்காக, சனிக்கிழமையில் கிடைக்கும் வாரக்கூலி என சர்மா கூறியுள்ளார். ஆனாலும் போலீசார் அந்த பணத்தை பறித்து கொண்டு, உரிய ஆவணத்தை காட்டிவிட்டு, பணத்தை வாங்கி செல் என கூறிச் சென்றனர்.
வாக்குவாதம் செய்த தொழிலாளி:
இதையடுத்து சர்மா, தான் வேலை செய்யும் கான்ட்ராக்டரிடம் இதுபற்றி கூறினார். உடனே சர்மாவை அழைத்து கொண்டு, கான்ட்ராக்டர் திருவேற்காடு காவல் நிலையம் சென்றார். அங்கு இன்ஸ்பெக்டர் இல்லை. போலீசாரிடம் கூலி வாங்கி வருபவர்களிடம் பணத்தை எப்படி பறிக்கலாம், ரூ.2100 கூட தேர்தல் சமயத்தில் கொண்டு செல்லக்கூடாதா என்று போலீசாரிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சமரசம் செய்த போலீசார்:
உடனே போலீசார் அவரை தனியறைக்கு அழைத்து சென்று சமரசம் செய்தனர். ஆனால், அவர் பணம் பறித்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் யார் என்று இப்போதே சொல்ல வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
100க்கு மேல இருந்தா விதிமீறல்!!! :
பின்னர் போலீசார் தங்களது பணத்தை சர்மாவிடம் கொடுத்து அனுப்பினர்.தொழிலாளிகள் ரூ.100க்கு மேல் பாக்கெட்டில் வைத்திருப்பது தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் என்று போலீசார் கூறி என் பணத்தை பறித்து சென்றனர் என்று சர்மா புலம்பினார்.