சென்னை சில்க்சில் 2வது நாளாக தீ தொடர என்ன காரணம்?
சென்னை: சென்னை தி.நகரிலுள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் 2வது நாளாக இன்றும் தீ தொடர காரணம் என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று காலை தீ விபத்து ஏற்பட்டபோதிலும், இரவு சற்று தணிந்த தீ இன்று காலை மீண்டும் வேகமாக எரியத்தொடங்கியது. சற்று அடங்கியிருந்த தீ மீண்டும் பற்றி எரிய என்ன காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீரத்தோடு போராடி வருகிறார்கள். அவர்களுக்கு அக்கம்பக்கத்தினரும் உதவிகள் செய்து வருகிறார்கள்.
7 மாடி கட்டிடம்
சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் உள்ள 7 தளங்களிலும் தீ பற்றியிருந்தது. ஒரே புகை மூட்டமானதால் தீயணைப்பு வீரர்களால் உள்ளே சென்று தீயை அணைக்க முடியவில்லை.
ரசாயன பொடி
இதையடுத்து ரசாயனப் பவுடர் மூலம் தீயை அணைக்க முயன்றனர். அதில் சற்று தீயின் தாக்கம் குறைந்தாலும், கடையின் உள்ளே ஏராளமான துணிகள் இருப்பதால், தீ மேலும் பரவி, கொளுந்து விட்டு எரிந்தது.
கட்டிடங்கள்
விடிய விடிய தீயை அணைக்க போராடியும் அது முடியவில்லை. இதனால் அதிகாலை முதலே படிப்படியாக கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதனால் அருகாமையில் உள்ள வீட்டுக்காரர்கள் வெளியே அனுப்பப்பட்டுள்ளனர்.
காரணம் இதுதான்
இந்நிலையில் இன்று காலை தீ சற்று தணிந்திருந்த நிலையில், முதல் கட்டத்தின் முன்பகுதியில் உள்ள பைபர் கண்ணாடியில் தீ பிடித்தது. இதனால் தீ ஜுவாலையாக பற்றி எரிந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். சுமார் 30 நிமிடங்களுக்கு பின்பு இந்த தீ கட்டுக்குள் வந்தது. பைபர் கண்ணாடியில் பிடித்த தீதான் 2வது நாளாக அணைக்க முடியாத அளவுக்கு தீ தொடர காரணம் என தெரிகிறது.