எஞ்சிய வாழ்வையும் காவு கேட்கும் ஸ்டெர்லைட்... போர்க்களமான குமரெட்டியார்புரம்.. களத்தில் இருந்து!
அலங்காநல்லூர் அன்று ஜல்லிக்கட்டுக்கான போர்க்களம்.. இப்போது ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போர்க்களமாகிறது தூத்துக்குடியின் குமரெட்டியார்புரம்.
துறைமுக நகரமான தூத்துக்குடியில் இயல்பாக உப்புக் காற்று. ..
தூத்துக்குடி புறவழிச் சாலையில் பிரிந்து போகும் பகுதியில் தொடங்குகிறது வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட்..
எதிரே விவி மிரனல்ஸின் டைட்டானியம் தொழிற்சாலை
இவற்றுக்கு நடுவே மக்கள் வாழ்விடங்கள்... மீண்டும் வழிநெடுக பெரும் பெரும் தொழிற்சாலைகள்...
இதையடுத்து மக்கள் வாழும் கிராமங்கள்... இப்படித்தான் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு தூத்துக்குடி சிப்காட் வளாகம் காட்சி தருகிறது..
நிலம் கருப்பாய், நீர் சிவப்பாய்.. காற்று அனலாய் தகிக்கிறது..
ஆம் அது மனிதர்கள் வாழத் தகுதியற்ற ஒரு பெரும் சூனிய பிரதேசம்..
இங்கே விளைநிலம் மலடாகிப் போனது... நிலத்தடி நீர் நஞ்சாகிப் போனது.. காற்று விஷமாகிப் போனது.. ஆனாலும் எஞ்சிய மனிதர்கள் வாழ்கின்றனர்.
எஞ்சிய இருப்பையும் விரிவாக்கம் என்கிற பெயரில் வேட்டையாடத் தொடங்கியிருக்கிறது ஸ்டெர்லைட் நிறுனம்... எங்கோ ஒரு மூலையில் ஒரு வீடு, ரூ5 லட்சம் பணம் என பேரத்தை பேசியிருக்கிறது ஸ்டெர்லைட்..
ஆனால் மண் நஞ்சாகிப் போனாலும் குடிப்பது கஞ்சிதான் எனினும் பிறந்த இடத்தை பறிகொடுத்து எங்கோபோய் அகதிகளாக வாழ்வதா? என்பதுதான் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு போராட்டமாக உருவெடுத்திருக்கிறது.
ஆம் ஏ. குமரெட்டியார்புரம் இப்படித்தான் போர்க்களத்தின் மையமாக விஸ்வரூபமெடுத்து 53 நாட்களைக் கடந்திருக்கிறது.
குமரெட்டியார்புரத்துக்குள் நுழையும் ஒவ்வொருவரது விவரத்தையும் காவல்துறை கேட்டு வாங்கி எழுதிக் கொண்டுதான் அனுமதிக்கிறது.
மரத்தடியில் 50 பெண்கள்... பிஞ்சு குழந்தைகள்.... திடீர் திடீரென குழு குழுவாக சரசரவென வாகனங்களில் வந்து இறங்கும் இயக்கங்கள், கட்சித் தொண்டர்கள்...
விண்ணை அதிர வைக்கும் முழக்கங்கள்.,.. நாசகார ஸ்டெர்லைட்டுகளின் காதுகளை கிழிக்கும் கதறல்கள்,,
பிஞ்சு குழந்தைகளின் வாழ்வுரிமைக்கான முழக்கங்கள்...
சற்றே சிறு சிறு உரையாடல்கள்... மீண்டும் இன்னொரு இயக்கம் அல்லது கட்சியின் ஆதரவு,...
இப்படியாகத்தான் குமரெட்டியார்புரம் 53 நாட்களைக் கடந்து செல்கிறது...
பகல் முழுவதும் இப்படியான போராட்ட களமாகத்தான் இருக்கிறது குமரெட்டியார்புரம்..
இதோ அடுத்த கட்டமாக ஸ்டெர்லைட் ஆலை முற்றுகைப் போர் தொடங்கியிருக்கிறது..
தூத்துக்குடி நகரத்தில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் குமரெட்டியார்புரத்தில் கேட்டுக் கொண்டிருந்த அத்தனை போர்க்குரல்களும் தூத்துக்குடி நகரத்துக்குள் மையம் கொள்ளத் தொடங்கிவிட்டன..
ஜல்லிக்கட்டுக்கான எழுச்சிக் களத்தை தொடங்கி வைத்தது.. அலங்காநல்லூர்.,.. சென்னை மெரினாவில் புரட்சி வெடித்தது..
இப்படித்தான் குமரெட்டியார்புரத்து கூக்குரல் தூத்துக்குடி நகரில் ஒரே இரவில் 25,000 பேரை குவித்தது..
இப்போது தூத்துக்குடி மீண்டும் போர்க்கோலத்தால் தகிக்கிறது..... ஸ்டெர்லைட் மட்டுமல்ல தாது மணல் கொள்ளை ஆலைகளுக்கு எதிராகவும் இந்த மக்களின் குரல் வெடித்து கிளம்புகிறது...
ஆம் இன்னொரு ஜல்லிக்கட்டு புரட்சிக் களமாக உருவெடுக்கிறது முத்துநகராம் தூத்துக்குடி...
ஏ. குமரெட்டியார் புரத்தில் கேட்ட
தொட்டிலில் உறங்கும் பிஞ்சுகள்
சுடுகாட்டில் தூங்குவதா?
என்கிற வலிதோய்ந்த முழக்கம் காதுகளை பிளக்கிறது இப்போதும்.!