சென்னை: போலீஸ் கஸ்டடியில் இளைஞர் மரணம்- இன்ஸ்பெக்டர் உட்பட 3 போலீசாருக்கு ஆயுள் தண்டனை!!
சென்னை: விசாரணைக்காக அழைத்துச்சென்ற இளைஞர் உயிரிழந்த வழக்கில் சென்னை வடபழனி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை செசன்சு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த குப்புசாமி மகன் முத்துலிங்கம் என்ற முத்து சென்னை விருகம்பாக்கம், பள்ளி தெருவில் வசித்து வந்தார். அட்டக்கத்தி உள்ளிட்ட பல திரைப்படங்களில் தயாரிப்பு மேலாளராக பணியாற்றியுள்ளார்.

வடபழனியில் உள்ள ஒரு லாட்ஜில் 35 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் தஞ்சாவூரை சேர்ந்த சாகுல்அமீது என்பவரை வடபழனி போலீசார் கடந்த 2011-ம் ஆண்டு பிடித்து விசாரித்தனர்.
அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முத்துலிங்கத்தை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை விழுப்புரம் மாவட்டத்தில் அடமானம் வைத்துள்ளதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரை விழுப்புரத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
அங்கு சென்றபின்னர் சென்னையில் அடமானம் வைத்துள்ளதாக கூறியுள்ளார். இதையடுத்து வடபழனி இன்ஸ்பெக்டர் நடசேன், சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி, தலைமை காவலர் முருகேசன், போலீஸ்காரர்கள் அசோக்குமார், ராஜ்மோகன் ஆகியோர் முத்துலிங்கத்தை சென்னை அழைத்து வந்தனர். அப்போது போலீஸ் வாகனத்தில் இருந்து தப்பியோட முத்துலிங்கம் முயற்சித்ததாக கூறப்பட்டது.
இதனால் அவரை போலீசார் கடுமையாக அடித்துள்ளனர். இதில் மயங்கி கீழே விழுந்த முத்துலிங்கம் பின்னர் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் நடேசன் உள்பட 5 பேர் மீது வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
மேலும் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் வடபழனி போலீஸ் இன்ஸ்பெக்டர் நடசேன் உள்பட 5 பேர் மீது குற்றம் சுமத்தி சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு சென்னை 16-வது கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாரிஸ் தீபிகா சுந்தரவதனா நேற்று தீர்ப்பு அளிக்கையில், இன்ஸ்பெக்டர் நடேசன், சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி, தலைமை காவலர் முருகேசன் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் 3 பேருக்கும் ஆயுள் தண்டனையையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. போலீஸ்காரர்கள் அசோக்குமார், ராஜ்மோகன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்பதால் அவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications