குழந்தைகளின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை - திருமாவளவன் வலியுறுத்தல்
சென்னை: குழந்தைகளின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விசாரணை ஆணையம் நியமிக்கப் பட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தர்மபுரி மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தைகள் கடந்த ஐந்து நாட்களில் பனிரெண்டு குழந்தைகளும், சேலம் மருத்துவமனையில் கடந்த மூன்று நாட்களில் எட்டு குழந்தைகளும் பிறந்த சில நாட்களில் உயிரிழந்துள்ள நிலைமை பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
மேலும் பதினாறு குழந்தைகள் தருமபுரி மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிய வருகிறது. இந்த அவலத்திற்குத் தமிழக அரசின் மெத்தனப்போக்கே காரணமாகும். குழந்தைகளின் இறப்புக்கு குறைபிரசவம் மற்றும் எடை குறைவுமே காரணங்களாகும் என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் கூறியிருக்கிறார்.
இத்தகு காரணங்களால் குழந்தைகள் இறந்துவிடாமல் பாதுகாத்திட வேண்டியது தான் அரசின் பொறுப்பாகும். போதிய எடைகொண்ட, உரிய காலத்தில் பிரசவமும் நடந்த குழந்தைகள் ஓரிரு நாட்களுக்குமேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதில்லை.
மாறாக குறைகளுடன் பிறக்கும் குழந்தைகளை ஓரிரு வாரங்களுக்கு மருத்துவமனையிலேயே அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும். அவ்வாறு அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்ந்து பலியாவதற்கு அரசின் மெத்தனம்தானே காரணமாகும்.
ஓரிரு குழந்தைகள் பலியானவுடனே அரசு அதில் சிறப்பு கவனம் செலுத்தியிருக்க வேண்டமா? தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்க வேண்டமா? தருமபுரி, சேலம் மருத்துவ மனைகள் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் போதிய பராமரிப்பின்றியே இயங்கி வருகின்றன.
அரசு மருத்துவமனைக்குப் போனாலே ‘நோய்த்தொற்று' தங்களையும் பாதிக்குமோ என்று பொதுமக்கள் அஞ்சும் அளவில்தான் அவை போதிய சுகாதாரம் இன்றி உள்ளன. பெரும்பாலான மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள், போதிய செவிலியர்கள் மற்றும் போதிய துப்புரவு பணியாளர்கள் இல்லாத நிலை உள்ளது. எனவே, தருமபுரி மற்றும் சேலம் மருத்துவமனைகளில் நிகழ்ந்துள்ள இந்த அவலத்தை யொட்டி தமிழக அரசு தனது பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும். குழந்தைகளின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன் உண்மை நிலையை அறிவதற்கு ‘விசாரணை ஆணையம்' ஒன்றை நியமிக்க வேண்டும். குழந்தைகள் இறப்பு மற்றும் அரசு மருத்துவமனைகளின் பராமரிப்பு நிலைமைகள் குறித்து ஆராய்வதற்குரிய வகையில் விசாரணை ஆணையத்தை அமைத்திட வேண்டுமென்று தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.
அத்துடன், குழந்தைகள் பலியான குடும்பத்தினருக்கு தமிழக அரசு, தலா ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் விடுதலை சிறுத்தைகளின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்''என்று கூறியுள்ளார்.