ஓங்குகிறது ஸ்டாலின் கை... தா.மோ. அன்பரசன், எ.வ.வேலு மீண்டும் மா.செக்கள் ஆகிறார்கள்!
சென்னை: திமுக உட்கட்சித் தேர்தலில் பொருளாளர் மு.க.ஸ்டாலினின் கை ஓங்குகிறது. அவரது முக்கியமான ஆதரவாளர்களுக்கு மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காது என்று கூறப்பட்டு வந்த நிலையில் அவர்கள் போட்டியின்றி தேர்வாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
திமுக உட்கட்சித் தேர்தல் தற்போது நடந்து வருகிறது. இதில் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஒன்றிய, நகர செயலாளர்கள் வரை தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. பல இடங்களில் அடிதடி மோதல்கள், வெடிகுண்டு வீச்சு என்று கலவரங்களும் நடந்துள்ளன. நேற்று கூட கோயம்பேட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு நடந்தது.
தற்போது மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து அண்ணா அறிவாலயத்தில் மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
நேற்று காஞ்சீபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 18 மாவட்ட செயலாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு தா.மோ.அன்பரசன் மனு தாக்கல் செய்துள்ளார். இவரை தவிர வேறு யாரும் மாவட்ட செயலாளர் பதவிக்கு மனுதாக்கல் செய்யவில்லை. இதனால் தா.மோ.அன்பரசன் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும்.
தா.மோ.அன்பரசன் ஏற்கெனவே 3 முறை மாவட்ட செயலாளராக இருந்து திறம்பட பணியாற்றியவர். தற்போது 4-வது முறையாகவும் அவர் மாவட்ட செயலாளர் ஆகிறார் இவர் தீவிர ஸ்டாலின் ஆதரவாளர், முன்னாள் அமைச்சர்.
அதேபோல புதிதாக உருவாக்கப்படும் காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு சுந்தர் மனு தாக்கல் செய்துள்ளார். இவரும் போட்டியின்றி தேர்வாகிறார்.
இதே போல் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மனுதாக்கல் செய்துள்ளார். இவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். வேலுவும் தீவிர ஸ்டாலின் ஆதரவாளர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.