சட்டசபையில் ஜெ.,வை கைதட்டி ரசித்து சிரிக்க வைத்த திமுக எம்.எல்.ஏ மா.சுப்ரமணியன்
சென்னை: சட்டசபையில் அனல் பறக்கும் கார சார விவாதங்கள்... வெளி நடப்புகளுக்கு இடையே அவ்வப்போது கலகலப்பான சம்பவங்களும் நடைபெறும். நேற்றைய விவாதத்தின் போது சட்டசபை சபாநாயகரைப் பார்த்து மாண்புமிகு மேயர்... என திமுக உறுப்பினர் மா.சுப்பிரமணியன் அழைக்கவே அதைக் கேட்ட முதல்வர் ஜெயலலிதா கைகளைத் தட்டி ரசித்து சிரித்தார்.
சட்டசபையில் நேற்று நடைபெற்ற உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய மா.சுப்பிரமணியன் சென்னை மாநகர் பிரச்சினைகள் தொடர்பாகவே பேசினார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, ''திமுக உறுப்பினர் பேசுவதைக் கேட்டால் இது தமிழக சட்டப் பேரவையா? அல்லது சென்னை மாநகராட்சி மன்றமா? என்ற சந்தேகம் எழுகிறது. அந்த அளவுக்கு தமிழகம் முழுவதும் உள்ள பிரச்சினைகளை பேச வேண்டிய உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கையில் சென்னை பற்றி மட்டுமே பேசுகிறார் என்று கூறினார்.
மா.சுப்ரமணியன்
அதற்கு பதிலளிக்க எழுந்த மா.சுப்பிரமணியன், சபாநாயகர் பி.தனபாலை நோக்கி மாண்புமிகு மேயர் அவர்களே... என அழைத்து பேசத் தொடங்கினார். இதனால் அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் சிரிப்பலையால் அவை அதிர்ந்தது.
சிரித்த ஜெயலலிதா
மா.சுப்ரமணியன் கூறியதைக் கேட்டு முதல்வர் ஜெயலலிதாவும் தனது கைகளைத் தட்டி சிரித்தார். அதனைத் தொடர்ந்து பேசிய பேரவைத் தலைவர், திமுக உறுப்பினர் மா.சுப்பிரமணியன் தமிழகம் முழுவதும் உள்ள பிரச்சினைகளை பேச வேண்டும் என்றார்.
மேம்பாலங்கள்
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டா லின் சென்னை மேயராக இருந்தபோது 10 மேம்பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டு உரிய காலத்தில் 9 மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டன. திட்ட மதிப்பீட்டை விட குறைவான தொகையில் பணி முடிக்கப்பட்டு மாநகராட்சிக்கு சுமார் ரூ.33 கோடி மிச்சமானது.
அதிமுக ஆட்சியில் பாலங்கள்
இங்கு பேசிய அமைச்சர்கள் அதிமுக ஆட்சியில்தான் மேம்பாலங்கள் கட்டப்பட்டன என்றார்கள். சென்னையில் அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட ஒரு பாலத்தையாவது கூற முடியுமா?
அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
அதிமுக ஆட்சியில் வேளச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் மேம்பாலங்கள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. பெரும்பாலான மேம்பாலங்கள் அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 95 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் தேவையற்ற இடங்களிலும், தொலைநோக்குப் பார்வை இல்லாமலும் பல இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன.
முதல்வர் ஜெயலலிதா:
மா.சுப்பிரமணியன் சென்னை மாநகராட்சி மேயராக இருந்தவர். அதனாலோ என்னவோ உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் சென்னையைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டு இருக்கிறார். வியாழக்கிழமை பேசிய திமுக உறுப்பினர் க.பொன்முடியும் சென்னையில் 10 மேம்பாலங்கள் கட்டப்பட்டன. அதற்கு ஸ்டாலின்தான் காரணம் என புகழ்ந்தார். இன்று சுப்பிரமணியனும் அதையே பேசுகிறார்.
தமிழகம் முதலிடம்
உள்ளாட்சித் துறை என்பது சென்னைக்கு மட்டுமல்ல. தமிழகம் முழுவதுக்குமானது. எனவே, அவர், தமிழகம் முழுவதும் உள்ள பிரச்சினைகளை பற்றி பேச வேண்டும். இந்தியாவில் நகரமயமாகி வரும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
படிப்படியாக உயர்வு
கிராமங்களில் இருப்பவர்கள் நகரங்களுக்கு இடம்பெயர்வதால் தமிழகம் நகரமயமாகவில்லை. நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் மாநகராட்சி அந்தஸ்துக்கு படிப்படியாக உயர்ந்து வருகின்றன. இதனை திமுகவினர் புரிந்துகொள்ள வேண்டும் என்றார் ஜெயலலிதா. சட்டசபையில் வெள்ளிக்கிழமையன்று இவ்வாறு விவாதம் நடை பெற்றது.