ஆலமரத்தடியில் நடைபெறும் “எட்டுப்பட்டி” பஞ்சாயத்துதான் இப்போதைய சட்டசபை - துரைமுருகன் கிண்டல்
ஜெயங்கொண்டம்: தமிழகத்தில் சட்டசபை ஆலமரத்தடியில் நடைபெறும் எட்டுப்பட்டி பஞ்சாயத்து போல நடந்துவருகிறது என திமுக தலைமைக் கழக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
பெரியார் விருதுபெற்ற முன்னாள் எம்.பி சிவசுப்ரமணியனுக்கு ஜெயங்கொண்டத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் துரைமுருகன், "திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தபட்டன. தற்போது சட்டமன்றத்தில் திமுகவினர் பேசுவதற்கே இடம் கொடுப்பது இல்லை.
டி.எஸ்.பி விஷ்ணு பிரியா கொலை வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும், ஓடும் பேருந்தில் பெண் விழுந்தது, பேருந்துகளின் இன்றைய நிலை உள்ளிட்ட 32 தீர்மானங்களை கொடுத்தும் பயனில்லை.
சட்டமன்றத்தில் மரபு என்பதே இல்லை. அது ஒரு எட்டுப் பட்டி பஞ்சாயத்து போலதான் நடைபெறுகின்றது. மின்தட்டுப்பாட்டை பற்றி கேட்டால் இது மின் தட்டுப்பாடு இல்லை... மின் தடங்கல் என்கின்றனர்.
பிற்பட்ட சமூகத்தினருக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு பெற்றுக் கொடுத்தது திமுக ஆட்சி. அதனால் டாக்டர், பொறியாளர் என பயன்பெற்றோர் ஏராளம், அன்புமணி ராமதாசுக்கு அமைச்சர் பதவி பெற்றுத் தந்ததும் திமுக, ஆனால் அவர்கள் திராவிட கட்சிகளை ஒழிப்போம் என பேசிவருகின்றனர்.
அவர்கள் வளர்ந்ததற்க்கு நாங்கள்தான் காரணம். இது நியாயமில்லை, அவர்கள் யோசித்து பேசவேண்டும், பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது, செம்மொழியாக்கிய பெருமை, திமுகவை சேரும்" என்று பேசியுள்ளார்.