ஜூன் 20 முதல் 4 நாட்கள் சட்டசபைக் கூட்டத் தொடர் நடைபெறும்- சபாநாயகர் தனபால்
சென்னை: ஜூன் 20ம் தேதி முதல் 4 நாட்களுக்கு தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நடக்கும் என சட்டசபை சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். நாளை எம்.எல்.ஏக்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் சபாநாயகர் கூறியுள்ளார்.
தமிழகத்தின் 15 வது சட்டசபையில் முதல் கூட்டம் இன்று ஆளுநர் ரோசய்யா உரையுடன் துவங்கியது. 11 மணியில் இருந்து ஆளுநர் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் தனபால் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசித்தார். இவற்றுடன் இன்றைய சபை கூட்டம் முடிந்தது.
பின்னர் சட்டசபை அலுவல் தொடர்பான கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் தனபால், நாளை சட்டசபை கூட்டத்தின் போது மறைந்த அதிமுக எம்.எல்.ஏ. சீனிவேலுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். 4 முன்னாள் எம்.எல்.ஏக்களின் மறைவுக்கு நாளை இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும். இரங்கல் தீர்மானத்திற்குப் பின்னர் சபை ஒத்திவைக்கப்பட்டு 20தேதி சட்டசபை கூடும் என்று சபாநாயகர் தனபால் கூறினார்.
ஜூன் 20 ம் தேதி முதல் ஜூன் 23ம் தேதி வரையிலான 4 நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும். இதில் ஜூன் 20ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படும். அடுத்து வரும் நாட்களில் ஆளுநர் உரை மீதான விவாதங்கள் நடைபெறும் என்று தனபால் தெரிவித்தார்.