மதுக்கடைகளை மூட நத்தம் விஸ்வநாதன் மறுப்பு... எதிர்கட்சிகள் கொதிப்பு... 'குடி' மகன்கள் மகிழ்ச்சி
சென்னை: சட்டசபையில் எதிர்கட்சியினர் கேட்கும் கேள்விக்கு அவர்கள் பாணியிலேயே பதிலளிப்பார் திமுக தலைவர் கருணாநிதி. மதுவிலக்கு அமல்படுத்துவது பற்றி சட்டசபையில் நடந்த விவாதத்தில், கருணாநிதியின் கருத்தை கடன்வாங்கி, பேசியதோடு, தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்தவே முடியாது, என, அந்தத் துறையின் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உறுதியாக தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் அறிவிப்புக்கு திமுக, பாஜக, தமாகா உள்ளிட்ட எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் அமைச்சரின் அறிவிப்புக்கு 'குடி'மகன்கள் குஷி அடைந்துள்ளனர். அமைச்சருக்கு நன்றி சொன்னதோடு, தங்களுக்கு தனி மருத்துவமனை வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர் குடி மகன்கள்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும் முழு மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, கடந்த சில மாதங்களாக ஏராளமான போராட்டங்கள் நடைபெற்றன. காந்தியாவாதி சசிபெருமாளின் மரணம் போராட்டத்தை தீவிரப்படுத்தியது. சட்டசபை தேர்தலுக்கு முன்பாக மதுவிலக்கு அறிவிப்பை அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆளுநர் உரையிலும் இது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்நிலையில், இந்தப் பிரச்னை நேற்று சட்டசபையில் சூடான விவாதத்தை கிளப்பியது. தே.மு.தி.க., உறுப்பினர் பார்த்தசாரதி மதுவிலக்கு அமல்படுத்துவது குறித்து ஆரம்பிக்க அதற்கு ஆதரவாக, தி.மு.க., - மா.கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் பேசினர்.
மதுவிலக்கு விவாதம்
'பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும்' என, அனைத்து கட்சிகளும், கோரிக்கை விடுத்துள்ளன; ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. மதுக்கடைகளை மூடி, மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக, தமிழகம் ஏன் இருக்கக் கூடாது?என்று கேட்டார் தேமுதிக எம்.எல்.ஏ பார்த்தசாரதி.
விவஸ்தையே இல்லையா?
யார் தான் இந்தக் கோரிக்கையை வைப்பது என்ற விவஸ்தை இல்லையா என்று நக்கலாக கேட்டார் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன். இது தொடர்பாக, சட்டசபையில் பல முறை பேசி உள்ளேன். நடைமுறை சூழ்நிலையில், தமிழகத்தில், மது விலக்கு சாத்தியமல்லை என்றார்.
நெருப்புக்கு மத்தியில் கற்பூரம்
மது விற்பதில், எங்களுக்கும் உடன்பாடு இல்லை. ஆனாலும், வருத்தத்தோடு தான் இதைசெய்கிறோம். இந்தப் பிரச்னைக்கு பதில் அளிக்க, கருணாநிதி கூறிய கருத்தை இரவல் வாங்குகிறேன். 'எரிகிற நெருப்பு ஜூவாலைக்கு மத்தியில், கற்பூரம் பாதுகாப்பாக இருக்க முடியாது' என, அவர் ஏற்கனவே கூறியிருக்கிறார்.
முடியுமா, முடியாதா?
மது விலக்கை அமல்படுத்த முடியுமா, முடியாதா; அதை கூறுங்கள் என்று திமுக எம்.எல்.ஏ துரைமுருகன் கேட்க அதற்கு பதிலளித்த நத்தம் விஸ்வநாதன், மத்திய அரசு, அனைத்து மாநிலங்களிலும், மது விலக்கை அமல்படுத்தினால், அதை ஆதரிக்கும் முதல்ஆளாக, முதல்வர் ஜெயலலிதா இருப்பார் என்றார்.
சவுந்திரராஜன் எம்.எல்.ஏ, சிபிஎம்
மது விலக்கை அமல்படுத்தினால், வருவாய் இழப்பு ஏற்படும் என, பயப்படுகிறீர்களா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்ஏ சௌந்தரராஜன் கேட்க, அதற்கு பதிலளித்த நத்தம் விஸ்வநாதன், அது, ஒரு காரணம். மதுக்கடைகளை மூடினால், தமிழகத்திற்கு வர வேண்டிய வருவாய், பக்கத்து மாநிலங்களுக்கு சென்று விடும். 'நம் வீட்டு கோழி, பக்கத்து வீட்டில் முட்டையிட எப்படி அனுமதிக்க முடியும்' என, கருணாநிதியே கேட்டிருக்கிறார் என்றார்.
படிபடிப்படியாக குறைக்கலாமே
இந்த அரசு, மது விலக்கை கொண்டு வராது என்று துரைமுருகன் சொல்ல, அமைச்சர் விஸ்வநாதனோ, மத்திய அரசு அமல்படுத்தினால், மாநில அரசும் அமல்படுத்தும் என்றார். அப்போது குறுக்கிட்ட ஸ்டாலின், உடனடியாக, அனைத்து கடைகளையும் மூட முடியாவிட்டால், படிப்படியாக குறைக்கலாம்; அதை அரசு செய்யுமா? என்று கேட்டார்.
உயர்நீதிமன்றம் உத்தரவு
ஸ்டாலினின் கேள்விக்கு பதில் சொன்ன நத்தம் விஸ்வநாதன், மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதிகளில், கடை மூடப்படுகிறது என்றார். அதற்கு பதிலளித்த சௌந்தரராஜன், சேலம் பகுதியில், கடையை மூடும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் மூடப்படவில்லை என்றார்.
கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலங்கள்
அரசிடம் சொன்னால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்ன நத்தம் விஸ்வநாதன், மேற்கு வங்கம், திரிபுரா, கேரளா போன்ற மாநிலங்களில், மார்க்சிஸ்ட் ஆட்சியில் இருந்தபோது, மது விலக்கை அமல்படுத்தவில்லை. அங்கு ஒரு கொள்கை, இங்கு ஒருகொள்கையா? என்று கேட்டார். இதற்கு பதிலளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பாலபாரதி, அங்கு அரசு மதுபானங்களை விற்கவில்லை என்றார்.
நீங்கள் எல்லாம் உத்தமர்களா?
பாலபாரதிக்கு பதிலளித்த நத்தம் விஸ்வநாதன், தனியார் கொள்ளை அடிக்கக் கூடாது என்பதற்காக, பொதுஉடைமை கொள்கைப்படி, அரசே கடைகளை நடத்துகிறது என்றார். உடனே மதுவிலக்கு பற்றி விவாதம் ஆரம்பித்த எம்.எல்.ஏ பார்த்தசாரதியோ ஒரு கட்டத்தில் கடுப்பாகி, மது விலக்கை அமல்படுத்த முடியுமா, முடியாதா என்ற கேள்விக்கு மட்டும் பதில் அளியுங்கள். அதை விடுத்து, விவஸ்தை இல்லை என்று சொல்லாதீர்கள். நீங்கள் எல்லாம் உத்தமர்களா? என்று கேட்டார். இவ்வாறு சட்டசபையில் விவாதம் நடந்தது.
குடி மகன்கள் வரவேற்பு
அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் அறிவிப்புக்கு, மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தலைவர் செல்லப் பாண்டியன், தமிழகத்தில், 37 சதவீத ஆண்கள், 8 சதவீத பெண்கள் என, மொத்தம், 45 சதவீதம் பேர், மது குடிக்கின்றனர் என்று கூறியுள்ளார்.
தமிழகத்திற்கு வருமானம்
எங்களால் அரசுக்கு நாள்தோறும், 70 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. எல்லா கட்சிகளும் மது விலக்கு கேட்கின்றன. முதலில், அவர்கள், தங்கள் கட்சியில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும். மது குடிக்கும் நிர்வாகிகளையும், தொண்டர்களையும் நீக்க வேண்டும்; அதன்பிறகு, மது விலக்கு கேட்க வேண்டும்.
ஈவேரா மாநாடு
கடந்த, 1963 ஜனவரி 21ல், மதுவுக்கு ஆதரவாக கும்பகோணத்தில், ஈ.வெ.ரா., மாநாடு நடத்தினார். அதே நாளான இன்று, மது விலக்கை அமல்படுத்த முடியாது என அமைச்சர், சட்டசபையில் அறிவித்துள்ளார். இதன்மூலம், ஈ.வெ.ரா., வழியில் நத்தம், எங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு உள்ளார்.
குடி மகன்களின் கோரிக்கை
இந்த அறிவிப்பு மூலம், மது குடிப்போரின் ஒட்டு மொத்த ஆதரவை, அ.தி.மு.க.,வுக்கு அவர் பெற்று தந்துள்ளார். மது குடிப்போருக்கு தனி மருத்துவமனை; தனி வாகன எண் போன்ற, எங்களது நீண்ட நாள் கோரிக்கைகளையும், நத்தம் விரைவில் நிறைவேற்றுவார் என, நம்புகிறோம் என்று கூறியுள்ளனர். நல்லா வைக்கிறாங்கப்பா கோரிக்கை.