சட்டசபை கூட்டம்: தமிழக அரசுக்கு ஆளுநர் புகழாரம்!- திமுக வெளிநடப்பு- விஜயகாந்த் வரவேயில்லை

தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் ரோசய்யா உரையுடன் இன்று நண்பகல் 12 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரையில், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டங்களை போக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சவால்களை அரசு திறம்பட எதிர் கொண்டு வருகிறது என்றும் கூறினார்.
மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல இந்த அரசு உறுதிப்பூண்டுள்ளது என்றும் ஆளுநர் தெரிவித்தார்.
தொழில் வளர்ச்சிக்கு தமிழக அரசு அனைத்து நடவடிக்கையும் செய்து வருகிறது என்றும், தொழில் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவற்றை முதல்வர் நீக்கியுள்ளதாகவும் ஆளுநர் பாராட்டினார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை கொண்டு வர தமிழக அரசு தொடர்ந்து போராடி வருகிறது என்றும் கூறிய ஆளுநர், அந்தமான் படகு விபத்தின்போது மீட்புப்பணியில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டது என்றார்.
திமுக வெளிநடப்பு
ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவை கூட்டத்திலிருந்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும் மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் உறுப்பினர்களும் அவையை வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தமிழகம் முழுவதும் குற்றங்கள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டினார். எதிர்கட்சிகள் மீது பழிவாங்கும் நோக்குடன் வழக்குகள் போடப்படுவதாகவும் கூறினார். கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்று மக்கள் பிரச்சினையை பேசுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை:
நடப்பு ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரான தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 3 வரை கூட்டம்
இதையடுத்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது வெள்ளிக்கிழமை விவாதம் தொடங்குகிறது.
ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 2-ம் தேதி) சட்டப்பேரவை கூட்டம் நடைபெறாது. பிப்ரவரி 3-ம் தேதி வரை இக்கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. இன்று பிற்பகல் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்குப் பிறகு சபாநாயகர் தனபால் இதனை அறிவித்தார்.












Click it and Unblock the Notifications