மீனவர்களின் படகுகளை கைப்பற்ற இலங்கைக்கு ஆலோசனை கூறிய சு. சுவாமிக்கு தமிழக பாஜக கண்டனம்
சென்னை: தமிழக மீனவர்களின் படகுகளைக் கைப்பற்றி வைத்துக் கொள்ள இலங்கை அரசுக்கு தானே ஆலோசனை கூறியதாக சுப்பிரமணியன் சுவாமி கூறியிருப்பதற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்து பின்னர் விடுவித்து விடுங்கள். தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்காமல் பறிமுதல் செய்து வைத்துக் கொள்ளுங்கள் என்று இலங்கை அரசுக்கு நான் ஆலோசனை கூறினேன். அதன்படிதான் இலங்கை அரசு செயல்படுகிறது என்று கூறியிருந்தார்.
கொடும்பாவி எரிப்பு
சுப்பிரமணியன் சுவாமியின் பேட்டிக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கடலூர் உள்ளிட்ட பல இடங்களில் நேற்று சுப்பிரமணியன் சுவாமியின் கொடும்பாவியை எரித்தனர்.
தமிழிசை கண்டனம்
இந்த நிலையில் சுப்பிரமணியன் சுவாமியின் கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழிசை சவுந்திரராஜன் கூறியதாவது:
அக்கறை கொண்ட பாஜக
பாரதிய ஜனதா கட்சிதான் தமிழக மீனவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. அவர்களின் துன்பத்தையும், துயரத்தையும் தீர்ப்பதற்கு என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் என கட்சி யோசித்து வருகிறது.
பாஜக கருத்து அல்ல .. கண்டனம்
சுப்பிரமணியன் சுவாமி சொன்னது பாரதிய ஜனதாவின் கருத்துக்கள் அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அவரது இக்கருத்தை கண்டிக்கிறோம்.
தமிழக பாஜக வளர்ச்சிக்குத் தடை
சுவாமியின் இத்தகைய நடவடிக்கையானது தமிழகத்தில் பாரதிய ஜனதாவின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது என்பதை கட்சி மேலிடத்துக்கு தெரிவித்திருக்கிறேன்.
இவ்வாறு தமிழிசை சவுந்திரராஜன் கூறினார்.