வாடகை வீடு பிரச்னை குறித்து விவாதிக்க தீர்ப்பாயம்- தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை!
தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வாடகை வீடு பிரச்னை குறித்து விசாரிக்க தீர்ப்பாயம் அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
சென்னை : சட்டசபையின் இன்றைய அலுவல்கள் முடிந்த கையோடு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வாடனை வீடு பிரச்னை குறித்து விவாதிக்க தீர்ப்பாயம் அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ள மத்திய அரசின் திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும். குறைந்த செலவில் உள்ளூர் விமான சேவை வழங்கும் உதான் திட்டத்திற்கு அனுமதி கிடைத்த நிலையில் தமிழகத்தில் இந்த திட்டத்திற்கான ஒப்புதல் அளித்தல் தொடர்பாக அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
உதய் மின் திட்ட விரிவாக்கத்திற்கான ஒப்புதல் அளிப்பது குறித்தும் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் ஜவுளி, தீப்பெட்டி, பட்டாசு உள்ளிட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைப்பது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுத்துரைக்க உள்ள அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்கள் விரிவாக்கம் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அத்துடன் வாடகை வீடு பிரச்னை குறித்து விவாதிக்க தீர்ப்பாயம் அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அரசின் திட்டங்களுக்கான கொள்கை முடிவுகள் எடுக்க வேண்டியுள்ளதால், இதனையொட்டி சட்டசபை அலுவல்கள் முடிந்த கையோடு அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.