காவிரி வழக்கில் முன் வைக்க வேண்டிய வாதங்கள் என்ன?... சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் ஆலோசனை!
ஏப்ரல் 9ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரஉள்ள காவிரி வழக்கில் தமிழக அரசு முன் வைக்க வேண்டிய வாதங்கள் பற்றி முதல்வர் சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏப்ரல் 9ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கின் போது முன் வைக்க வேண்டிய வாதங்கள் பற்றி தமிழக முதல்வர் பழனிசாமி சட்ட வல்லுநர்களுடன் சென்னையில் ஆலோசனை நடத்தினார்.
காவிரி வழக்கின் இறுதித் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை என்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்குகள் அனைத்தும் ஏப்ரல் 9ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு சார்பில் என்னென்ன வாதங்கள் முன்வைக்க வேண்டும் என்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் சட்ட வல்லுநர்கள், அதிகாரிகள், அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வழக்கிறஞர்கள் பரமசிவம், விஜயகுமார் மற்றும் தமிழக தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோரும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க தமிழகம் சார்பில் நீதிமன்றத்தில் அழுத்தமான கருத்துகளை முன் வைக்க வேண்டும் என்று முதல்வர் ஆலோசனை வழங்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications