மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் 85% இடஒதுக்கீடு.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் மேல்முறையீடு!
தமிழக மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் 85 சதவீத இடஒதுக்கீடு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை : மருத்துவ மாணவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு செல்லாது என்று ஹைகோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவப் படிப்புகளுக்காக தமிழக அரசு கடந்த 22-ந்தேதி ஒரு அரசாணை வெளியிட்டது. அதில், தமிழகத்தில் உள்ள மருத்துவ படிப்புகளில் உள்ள இடங்களில் 85 சதவீதம் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும், மீதமுள்ள 15 சதவீதம் சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட மத்திய பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த அரசாணையை ரத்துசெய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், சிபிஎஸ்இ மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களிடையே எந்த ஒரு பாகுபாடும் இருக்கக்கூடாது என்பதற்காகத் தான் நீட் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்பட்டுள்ளது. அந்த தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் தான் மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறவேண்டும். ஆனால்,
மாணவர்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்தும் விதமாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையால், சி.பி.எஸ்.இ. மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, இந்த அரசாணையை ரத்து செய்வதுடன், இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தானர்
இந்த மனுவை விசாரித்த தனிநீதிபதி அமர்வும், சென்னை உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வும் அரசு கொண்டு வந்த 85 சதவீத உள்ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்தனர். மேலும் மருத்துவ நுழைவுத் தேர்வை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற ஒரு பக்கம் மத்திய அரசிடம் போராடும் தமிழக அரசு, 85 சதவீத உள்ஒதுக்கீட்டை அனுமதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.