கச்சா எண்ணெய் கசிவு - கப்பல் நிறுவனங்களுக்கு தமிழக அரசு நோட்டீஸ்
சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே கப்பல்கள் மோதி கடலில் கச்சா எண்ணெய் கசிந்தது கப்பல் நிறுவனங்களுக்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை: கப்பல்கள் மோதி கடலில் கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டது தொடர்பாக கப்பல் நிறுவனங்களுக்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடலில் கொட்டியது எத்தனை டன் கச்சா எண்ணெய் என்பது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி ஈரான் நாட்டில் இருந்து எரிவாயுவை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இறக்கிவிட்டு புறப்பட்டுச் சென்ற இங்கிலாந்து நாட்டின் எம்.பி.டபிள்யூ மாப்பிள் என்ற சரக்குக் கப்பலும் துறைமுகத்துக்கு 32 மெட்ரிக் டன் அளவிற்கு கச்சா எண்ணெயுடன் வந்த மும்பையின் டான் காஞ்சிபுரம் கப்பலும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.

கப்பல்கள் மோதல்
இதில் டான் காஞ்சிபுரம் கப்பலின் எரிவாயு டாங்கர் சேதம் அடைந்ததில் கச்சா எண்ணெய் கடலில் கசிந்து எண்ணூர், திருவொற்றியூர், காசிமேடு, மெரீனா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவியது. பல நாட்களாக வாளிகளில் கச்சா எண்ணெயை அள்ளி ஊற்றினர்.

எண்ணெய் கசிவு வெளியேற்றம்
பல டன் கச்சா எண்ணெய் கசிவுகள் அள்ளி வெளியேற்றப்பட்டன. இப்பணியில் கடலோர பாதுகாப்பு படை, மாநகராட்சி ஊழியர்கள், பொதுமக்கள் என பலதரப்பினரும் எண்ணெய் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

எண்ணெய் கசிவு
எண்ணெய் கசிவு ஏற்பட்டதில் ஆமைகள், மீன்கள் உள்ளிட்ட உயிரினங்கள் செத்து மிதந்தன. இதையடுத்து எண்ணூர் துறைமுகம் சார்பில் டான் காஞ்சிபுரம் கப்பல் மீது எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. எண்ணூர் துறைமுக மேலாளர் குப்தா அளித்த புகாரின் பேரில் மீஞ்சூர் போலீசார் கத்தார் கப்பல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்குப்பதிவு
விபத்தை ஏற்படுத்தியது, விபத்தை ஏற்படுத்தி கடல் மாசுபாட்டை ஏற்படுத்தியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போன்று தனது விசாரணை வரம்புக்கு உட்பட்ட இடத்தில் விபத்தை ஏற்படுத்தியதாக டான் காஞ்சிபுரம் மற்றும் எம்.பி.டபிள்யூ மாப்பிள் கப்பல்கள் மீது தமிழக கடலோரக் காவல்படையும் வழக்கு பதிவு செய்துள்ளது.

அரசு நிவாரணம்
கப்பல் நிறுவனங்களின் காப்பீட்டு நிறுவனத்தின் கேட்புப் படிவங்கள் மீனவர்களுக்கு விநியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை மீளப் பெறும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. எண்ணெய் கசிவினால் பாதிப்பிற்குள்ளான 30,000 மீனவக் குடும்பங்களுக்கு தலா ரூ.5,000/- வீதம் இடைக்கால நிவாரணமாக வழங்கிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

விளக்கம் கேட்டு நோட்டீஸ்
இதனிடையே விபத்தை ஏற்படுத்திய கப்பல் நிறுவனங்களுக்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டான் காஞ்சிபுரம் கப்பலில் இருந்து பல்லாயிரம் லிட்டர் கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. கடலில் கொட்டியது எத்தனை டன் எண்ணெய் என விளக்கம் கேட்டு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications