குட்கா லஞ்ச விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை அவசியம்: சென்னை உயர்நீதிமன்றம்
குட்கா விற்பனை செய்ய அமைச்சர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கில் சிபிஐ விசாரணை அவசியம் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ய அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோர் லஞ்சம் வாங்கியது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டிலிருந்து உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் குட்கா, பான் மசாலா ஆகிய புகையிலை சார்ந்த பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது. ஆனால் சட்டவிரோதமாக குட்கா விற்பனை நடைபெற்று வருகிறது.

அண்மையில் தமிழக காவல் துறை உயர் அதிகாரிகள் டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்றனர் என வருமான வரித்துறையின் அறிக்கையிலும் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பியது.
சட்டசபையிலும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இந்த விவகாரத்தை கிளப்பினார். இதனிடையே அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்டோர் குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்றது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக எம்எல்ஏ அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரித்தது.
இந்த விசாரணையின் போது, இவ்வழக்கில் சிபிஐ விசாரணை தேவை என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். ஆனால் குட்கா விற்பனை செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விட்டதால் சிபிஐ விசாரணை தேவையில்லை என்று தமிழக அரசு வாதிட்டது.
இதைத் தொடர்ந்து குட்கா விவகாரத்தில் தமிழக டிஜிபியும், சிபிஐயும் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications